'நீங்க அவ்ளோ நல்லவங்கனா ஏன் அர்னாப் மீது கேஸ் போடல?' - பாஜகவை விளாசிய சிவசேனா
டெல்லி: ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அர்னாப் கோஸ்வாமி மீது பாஜக ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
டிஆர்பி கணக்கீடு குறித்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, BARC அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பார்தோ தாஸ்குப்தா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரின் வாட்ஸ் அப் உரையாடல் என்பதாக அறியப்படும் சில Chat-கள் சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம், தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு கிடைத்த சரியான வாய்ப்பாக அமைந்ததாக அர்னாப் கூறுவது போல் அந்த சாட் அமைந்திருந்தது.
இதுகுறித்து சிவசேனா தனது சாமனா பத்திரிகையில், "தாண்டவ் வெப் சீரிஸ் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் வழக்குகளை பதிவு செய்தது சரி தான்; அதேசமயம், அவர்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்களாக இருந்தால், 'இந்திய வீரர்களின் தியாகத்தை அவமதித்த' அர்னாப் கோஸ்வாமி மீதும் வழக்குகளை பதிவு செய்திருக்க வேண்டும்" என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
100 கிராம் கஞ்சாவுடன் யாராவது பிடிபட்டால் ஊடகங்கள் பரபரப்பான விவாதங்களை உருவாக்கும். அதே வேளையில், கோஸ்வாமியின் தேசத் துரோகச் செயல் குறித்து விவாதங்களை நடத்த ஊடகங்கள் தயாராக இல்லை என்றும் சிவசேனா விமர்சித்துள்ளது.
முன்னதாக, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அர்னாப் கோஸ்வாமியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
டிஆர்பி-காக இதுபோன்ற தனது கேவலமான செயல்பாடுகளை நினைத்து அவர் வெட்கப்பட வேண்டும் என்றும் இனிமேலும் இது தொடரக் கூடாது என்றும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.