பாஜகவின் மிகப் பெரிய தலைவர்.. ஓரங்கட்டப்பட்டுவிட்டாரே.. சிவசேனை வேதனை
டெல்லி: கட்சியாக பார்த்து அவரை ஓரங்கட்டியதற்கு பதிலாக பாஜக மூத்த தலைவர் அத்வானியே அரசியலை விட்டு விலகியிருந்திருக்க வேண்டும் என சாம்னா பத்திரிகையில் சிவசேனை குறிப்பிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி போட்டியிடும் தொகுதியான காந்திநகர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் எல்கே அத்வானிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாஜக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனை கட்சி விமர்சனம் செய்துள்ளது.

பங்களிப்பு
அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், அத்வானி கட்சிக்கு ஆற்றிய தொண்டு எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கும். இளையவர்களும் எல் கே அத்வானியின் வழிகாட்டுதல்களையும் பங்களிப்பையும் நினைவில் வைத்து கொள்வர்.

அரசியல்
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு தேவை என பாஜக வெளியிட்ட அறிக்கையின் மூலம் அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த அறிக்கை வெளியான போதே மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அரசியலில் தொடர மாட்டார்கள் என புரிந்தது.

ஓரங்கட்டப்பட்டார்
எல்லாரும் அரசியலில் இருந்து ஒரு நாள் விலகத்தான் ஆக வேண்டும். கட்சியால் ஓரங்கட்டுவதற்கு பதில் கவுரவமாக தாமே விலகுவது மிகவும் சிறந்தது. அத்வானியும் இதை செய்திருக்க வேண்டும். அத்வானியும் வாஜ்பாயும் பாஜகவுக்கு ராமர், லட்சுமணன் மாதிரி. இருவரும் சேர்ந்து கட்சியை உச்சத்துக்கே கொண்டு சென்றனர். வாஜ்பாய் மரணத்துக்கு பிறகு அத்வானி முன்னிலைப்படுத்துவதில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

சிவசேனை
இந்த இருவரின் இடத்தை மோடியும், அமித்ஷாவும் பிடித்துக் கொண்டனர். இந்திய அரசியலில் அத்வானி பூஷ்மர். அவரது வழிகாட்டுதல்கள் சிவசேனா கட்சிக்கு தேவை. மூத்த தலைவர்களான சீதாராம் கேசரி, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் காங்கிரஸுக்கு கடுமையாக உழைத்துள்ளனர் . அவர்களையும் காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளது என்று சாம்னாவில் சிவசேனை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications