சுற்றிலும் உலக தலைவர்கள்.. தனியாக பறந்த ஒற்றை டிரோன்.. அலறிய டெல்லி போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், திடீரென அங்கே பறந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த டெல்லி போலீசாரையும் அலறவிட்டது.
தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ தொடங்கி உலகின் டாப் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

சர்வதேச அளவில் முக்கிய நிகழ்வான இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் டாப் தலைவர்களும் அங்கே முகாமிட்டுள்ளனர். மேலும், இதனால் அங்கே பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மாநாடு: இப்படி ஜி 20 உச்சி மாநாட்டிற்காகத் தேசிய தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் உள்ள படேல் நகர்ப் பகுதியில் ஆளில்லா டிரோன் விமானம் பறந்துள்ளது. உலக தலைவர்கள் அனைவரும் அங்கே குவிந்துள்ள நிலையில், திடீரென அங்குப் பறந்த இந்த ஒற்றை டிரோன் விமானம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
ஏற்கனவே டெல்லி ஜி20 மாநாட்டிற்காக அங்கே டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அங்கே திடீரென பறந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பம் உலக தலைவர்கள் வந்து கொண்டிருந்த போது, அதாவது நேற்று மாலை நடந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர்.
டிரோன் எங்கே: வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த டிரோன் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது விசாரணையில், அந்த டிரோன் படேல் நகர்ப் பகுதியில் இருந்து வந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அங்குச் சென்று விசாரித்த போது தான், அங்கே பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றதும் அதைக் கவர் செய்யவே போட்டோகிராபர்கள் ஆளில்லா டிரோன் விமானங்களைப் பறக்கவிடப்பட்டதும் தெரியவந்தது.
டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை மீறி டிரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டிற்காக IPC 188இன் கீழ் இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜி20 மாநாட்டிற்காக அங்கே எந்தளவுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... டெல்லி போலீசார் இதில் எந்தளவுக்கு எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. மேலும் பொதுமக்கள் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

கட்டுப்பாடுகள்: ஜி20 நாடு நடக்கும் நிலையில், டெல்லி போலீஸ் அங்கே விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.. அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஜி20 உச்சி மாநாடு முடியும் வரை டெல்லி மக்கள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. புது டெல்லியில் குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், டிரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லி பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications