மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்
டெல்லி: மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. வரும் 30ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில், மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மோடியின் பதவி ஏற்பு விழாவில் அண்டை நாடான இலங்கையின் அதிபர் சிறிசேனா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில், பாஜக அதிக இடங்களில் முன்னிலை இருப்பதாக தெரிந்ததுமே இலங்கை அதிபர் சிறிசேனா முதல் ஆளாக முந்திக்கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இருதரப்பு உறவு மேம்படும் என்று எதிர்நோக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே, அவர் நிச்சயம் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார் என்ற உறுதியாக நம்பப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சே கலந்து கொண்டார்.
இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் உள்ள எதிர்ப்பு காரணமாக, மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தவிர்த்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications