கெஞ்சினேனே.. யாருமே உதவலையே.. தாயின் உடலுடன் கண்ணீர் விட்டுக் கதறிய மகன்!
டெல்லி: டெல்லியில் கொரோனாவால் பாதித்த தனது தாயாருக்கு சிகிச்சை கிடைக்காமல் அவர் ஆட்டோவிலேயே உயிரிழந்ததை அறிந்த மகன் நடு ரோட்டில் கதறி அழுதுத் துடித்த காட்சி பார்ப்போரை பதற வைத்து விட்டது.
டெல்லியில் திரும்பிய பக்கமெல்லாம் இதுபோன்ற காட்சிகள் வெகு சகஜமாகி விட்டன. தலைநகரம் தத்தளிக்கிறது கொரோனாவிடம் சிக்கி. கொரோனாவில் உயிரிழப்போரை விட ஆக்சிஜன் கிடைக்காமல், சிகிச்சை கிடைக்காமல், மருத்துவமனை கிடைக்காமல் ரோட்டிலும், பிளாட்பாரத்திலும், வரும் வழியிலும் உயிரிழப்போர்தான் அதிகமாக உள்ளனர்.

இப்படித்தான் முகுல் வியாஸ் என்ற 28 வயது இளைஞர் தனது தாயாரை ஆட்டோ ஒன்றில் இன்று காலை சர்தார் வல்லபாய் படேல் கோவில் கேர் சென்டருக்கு கூட்டி வந்தார். இந்த மையத்தை இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் நடத்தி வருகின்றனர். ஆனால் உள்ளே இடமில்லாத காரணத்தால் முகுல் வியாஸுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
உயிருக்குப் போராடி வந்த தாயாரை ஆட்டோவில் வைத்துக் கொண்டு பதறினார் வியாஸ். தனது தாயார் கிரண் வியாஸின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் சிகிச்சை கொடுங்கள் என்றும் காவலர்களிடம் கெஞ்சினார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆட்டோவில் துடித்தபடி இருந்த 52 வயதான கிரண் வியாஸ் பரிதாபமாக உயிரிழந்து போனார். தாயார் மூச்சுப் பேச்சில்லாமல் போனதைப் பார்த்த முகுலும், அவருடன் வந்த சகோதரரும் அம்மா அம்மா என்று கூப்பிட்டுப் பார்த்தனர். நெஞ்சை அழுத்தி பார்த்தனர். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. கிரண் வியாஸ் ஏற்கனவே இறந்து போய் விட்டார்.
தாயார் இறந்து போனதைப் பார்த்த அந்த சகோதரர்கள் கதறி அழுதனர். என்ன செய்வது என்று தெரியாமல் துடித்தனர். முகுல் கூறுகையில், எனது தாயாரை கொன்று விட்டனர். அவரை எங்கு கொண்டு போவேன். பல மணி நேரம் காத்துக் கிடந்தேன். கேட்டைத் திறக்கவே இல்லை. பார்மாலிட்டியை செய்யுங்கள் என்றுதான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தனர். மெசேஜ் கொடுத்தேன், வாட்ஸ் ஆப் செய்தேன். எல்லாம் செய்தும் எனது தாயாருக்கு சிகிச்சை கிடைக்கவில்லை.எனது அம்மா இறந்து போய் விட்டார்.
ஒருவர் உயிருக்குப் போராடும்போதுதான் இப்படி பார்மாலிட்டி எல்லாம் கேட்பீர்களா.. யாருமே உதவிக்கு வரலையே.. கெஞ்சினேனே என்று அவர் கதறி அழுதார்.
டெல்லி முழுவதும் இதுபோன்ற காட்சிகளை அதிகம் காண முடிகிறது. இதற்கிடையே, டெல்லியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஐசியூ படுக்கைகளை அதிகரிக்க உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மே 10ம் தேதிக்குள் 1200 கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மட்டும் நேற்று ஒரே நாளில் அதிகாரப்பூர்வமாக 380 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications