இரவில் நடந்த ஜி 23 மீட்டிங்.. திடீரென இறங்கி வந்த சோனியா.. குலாம் நபி ஆசாத்துடன் ஆலோசனை.. திருப்பம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் ஜி 23 தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துடன் காங்கிரஸ் தலைகள் சோனியா காந்தி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த இரண்டு வருடமாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது உச்சம் தொட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைவர் வேண்டும் என்று கடந்த 2020ல் 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். சோனியாவிற்கு கடிதம் எழுதிய இந்த 23 தலைவர்கள்தான் ஜி 23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த ஜி 23 தலைவர்கள் 5 மாநில சட்டபை தேர்தல் தோல்வியை அடுத்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலும், பல்வேறு கட்ட பதவிகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இவர்கள் கூட்டம் நடத்தினர்.\
பாஜகவை எதிர்கொள்ள இதுதான் ஒரே வழி.. காங். ஜி 23 தலைவர்கள் முக்கிய முடிவு.. சோனியாவிற்கு அறிவுரை
நேற்று மீண்டும் கூட்டம்
இந்த நிலையில் நேற்று இதே ஜி 23 தலைவர்கள் மீண்டும் டெல்லியில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் சந்தித்து ஆலோசனை செய்தனர். கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மனிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா, ராஜிந்தர் கவுர் பட்டல், அகிலேஷ் பிரசாத் சிங், பிருத்விராஜ் சவான், பி.ஜே. குரியன், மணி சங்கர் ஐயர், குல்தீப் சர்மா மற்றும் ராஜ் பப்பர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
என்ன முடிவு
இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய, ஒருங்கிணைந்த தலைமை வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து மட்டங்களிலும் கூட்டு முடிவு எடுக்க கூடிய வகையில், அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் தலைமையை காங்கிரசில் கொண்டு வர வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தம் 18 தலைவர்கள் கையெழுத்து போட்டனர்.
சோனியா காந்தி
இந்த நிலையில்தான் சோனியா காந்தி நேற்று குலாம் நபி ஆசாத்திடம் பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று நேரில் சந்திக்காத நிலையில் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜி 23 கூட்டத்தை முன்னிட்டு இவர்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் என்ன ஆலோசனை செய்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இறங்கி வந்துள்ளார்
ஜி 23 தலைவர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் சோனியா முதல்முறையாக இறங்கி வந்து இப்படி குலாம் நபி ஆசாத்திடம் பேசி இருக்கிறார். வரும் நாட்களில் மேலும் சில ஜி 23 தலைவர்களிடம் சோனியா காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் சுமுகமான முடிவை எடுக்கும் வகையால் சோனியா காந்தி இப்படி இறங்கி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜி 23 தலைவர்கள் அதிருப்தியில் இருந்தாலும், வெளிப்படையாக அவர்கள் சோனியாவின் பதவி விலகலை கேட்கவில்லை.
தலைமைக்கு எதிர் இல்லை
அனைவருக்கும் வாய்ப்பு தரும், அனைவரையும் உள்ளடக்கிய தலைமை வேண்டும். அனைத்து மட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்றே ஜி 23 தலைவர்கள் நேற்று தீர்மானம் போட்டனர். மாறாக சோனியா காந்தியின் பதவி விலகலை இவர்கள் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு காங்கிரஸ் கட்சி ஒரு வீட்டின் கட்சியாக இருக்க கூடாது என்று கூறிய கபில் சிபல் வீட்டில் கூட்டத்தை நடத்தாமல் குலாம் நபி ஆசாத் வீட்டில் கூட்டத்தை இவர்கள் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
என்ன சொன்னார்
சோனியா குடும்பத்தை நாங்கள் நேரடியாக எதிர்க்கவில்லை என்று சொல்லும் விதமாக கூட்டம் கடைசி நேரத்தில் குலாம் நபி ஆசாத் வீட்டிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று கூட்டத்திற்கு பின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்த 23 தலைவர்களில் ஒருவர், நாங்கள் ஜனநாயக ரீதியாக எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம். நாங்கள் காங்கிரசில் இருந்து செல்ல மாட்டோம். அவர்களாக நீக்கும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம். பாஜகவை 2024ல் எதிர்கொள்ள நாம் வலுவாக தயாராக வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.