33% மகளிர் இடஒதுக்கீடு.. ஆதரிப்பதாக அறிவித்து “செக்” ஒன்றையும் வைத்த சோனியா காந்தி! என்ன பண்ணுவாங்க?
டெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, தங்கள் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டதைபோல் அது இல்லை என்று கூறியுள்ளார்.
5 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான இதை மத்திய அரசு கொண்டு வருவதை பல்வேறு தரப்பினர் வரவேற்று தெரிவித்தனர்.

நேற்று மதியம் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மசோதா மீது முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, "வாஜ்பாய் ஆட்சியின்போது பல முறை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் அது நிறைவேறவில்லை. திங்கட்கிழமை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அனைத்து கட்சி எம்பிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்." என்றார்.
அதன் மீது உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "மாநிலங்களவையில் ஏற்கனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது. அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவை போல் இது இல்லை. குழந்தைகளை பெற்றுக்கொள்வது மட்டுமின்றி அவர்களை வளர்த்து எடுப்பதும் பெண்கள்தான்.
பெண்களுடைய முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். ஆண்களுக்கு இணையாக இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பெண்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது ராஜீவ் காந்தியின் கனவாக இருந்து வந்தது. இந்திரா காந்தியின் பங்களிப்பு என்பது இந்திய வரலாற்றில் முக்கியமான ஒன்று.
ராஜீவ் காந்தி உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கி சட்டத்தை நிறைவேற்றியவர். பெண்கள் தங்களுடைய வாழ்நாட்டில் பல்வேறு கட்டங்களை தாண்டி வருகிறார்கள். பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். சரோஜினி நாயுடு, சுசிதா கிரிபலனி உள்ளிட்டோர் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இந்தியா எப்படி வர வேண்டும் என கனவு கண்டார்களோ அப்படி வாழ்ந்து காட்டினார்கள்.
இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். ஓபிசி பிரிவினருக்கு மகளிர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றி அமல்படுத்திட வேண்டும். மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் காட்டுவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications