ஐஏஎஸ் தேர்வில் கோல்மால் செய்தாரா.. சர்ச்சையில் லோக்சபா சபாநாயகர் மகள்!
டெல்லி : லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, ஐஏஎஸ் மெயின் தேர்வில் முறைகேடு செய்து மெரிட்டில் பாஸ் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதில் உண்ணையில் என்ன நடந்தது என்பது பற்றி அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார்.
23 வயதாகும் அஞ்சலி பிர்லா, 2019 ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், கடினமான 3 தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே பாஸ் செய்தார். அந்த ஆண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் மெரிட்டில் பாஸ் செய்தவர்கள் பட்டியலில் அஞ்சலியின் பெயரும் இடம்பிடித்திருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில், அஞ்சலி தேர்வே எழுதாமல், தனது தந்தையின் பதவி மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, முறைகேடு செய்து தான் மெரிட் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக ஆங்கில டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அதில், இவ்வாறு தவறாக தகவல் பரப்புவோர் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். இன்று நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நாளை வேறு ஒருவர் பாதிக்கப்படுவார். முதலில் இந்த வதந்தி என்னை மிகவும் பாதித்தது. பின் அடுத்து எதிர்கொள்ள உள்ள தேர்வுகளை மனதில் வைத்து என்னை தைரியப்படுத்திக் கொண்டேன்.
வாழ்க்கையில் இது போன்ற ஆதாரமற்ற பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அது என்னை பக்குவப்பட வைத்தது. எல்லா சமயங்களிலும் நான் எனக்கு உண்மையாக இருந்துள்ளேன். என்னை தெரிந்தவர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு கடுமையாக உழைத்தேன் என்று என தெரிவித்தார்.
வதந்திகளுக்கு பதில் கருத்து பதிவிட்டுள்ள அஞ்சலி, யுபிஎஸ்சி சிஎஸ்சி தேர்வுகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மை நிறைந்தது. இதில் குறுக்கு வழியில் நுழைய முடியாது. தயவு செய்து தேர்வு ஆணையத்திற்காவது மரியாதை கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications