நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்
டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு தனியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உடனடி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
18 வயதை தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மத்திய அரசு இன்று பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. தற்போது 45 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக வரும் மே 1ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கொள்முதல்
இதுதவிர கொரோனா தடுப்பூசிகளை யாருக்கு செலுத்துவது மற்றும் கொள்முதல் ஆகியவை குறித்தும் மத்திய அரசு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதில் 50 சதவீதத்தை மத்திய அரசிற்கு வழங்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவீதத்தைச் சந்தையில் மாநில அரசுகளுக்கு விற்பனை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை என்ன
மாநில அரசுகளுக்குக் குறிப்பிட்ட விலையில் தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஸ்டாலின் கடிதம்
முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்குத் தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தடுப்பூசி பணிகள்
இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் தயார் செய்யப்படும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications