திருவனந்தபுரத்தில் சிக்கிய F-35! என்ன லாக்ஹீட் மார்ட்டின் இதெல்லாம்? நம்பி வாங்க முடியுமா!
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரபல 5ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையிறங்கியது. ஏறத்தாழ இரண்டு வாரங்கள் ஆகியும் இந்த விமானம் இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு இந்த விமானத்தை விற்கும் முனைப்பில் டிரம்ப் இருந்த நிலையில், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் 'தேமே என' விமானம் நின்றிருப்பது அதன் தயாரிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலக நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நோக்கி சென்றுவிட்டன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை வெற்றிகரமாக இந்த விமானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றன. சீனா உதவியோடு பாகிஸ்தான் கூட இந்த விமான தயாரிப்பில் இறங்கிவிட்டது. ஆனால் இந்தியாவிடம் இந்த விமானம் இல்லை. எனவே இந்தியாவுக்கு F-35 விற்க அமெரிக்கா முன் வந்தது. இந்தியா இந்த ஆஃபரை பரிசீலித்து வந்த நிலையில், மேற்குறிப்பிட்ட சம்பவம், ஆஃபர் பரிசீலனையை தள்ளி போட வைத்திருக்கிறது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்
ஐந்தாம் தலைமுறை போர் விமானம், நான்காம் மற்றும் 4.5 தலைமுறை விமானங்களை (ரபேல்) விட மேம்பட்டது. இந்த விமானம், எதிரிகளின் கண்களுக்கு தெரியாத திறன் மற்றும் அதிவேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், இது மறைக்கும் பூச்சுக்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் சென்சார்கள், ஒருங்கிணைந்த விமான மின்னணுவியல் மற்றும் 'சூப்பர் க்ரூஸ்' எனப்படும் ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் பறக்கும் திறனையும் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் Su-57 5ம் தலைமுறை விமானம் நம்பகமானதாக கருதப்படவில்லை. சீனாவிடமிருந்து நம்மால் 5ம் தலைமுறை விமானங்களை வாங்க முடியாது. இந்த பின்னணியில், எஃப்-35 ரக போர் விமானம் ஒரு கவர்ச்சிகரமான ஆஃபராக தெரிந்தது. ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். ஒரு விமானத்தின் விலை 80 மில்லியன் டாலர் முதல் 110 மில்லியன் டாலர் வரை இருக்கும். இதுவே, மிக அதிக விலை கொண்ட போர் விமானமாகும்.
விலையை ஒருபுறம் வைத்தாலும், திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய எஃப்-35பி விமானம், எஃப்-35 ரக விமானத்தின் நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எஃப்-35 ரக விமானத்தில் எஃப்-35ஏ, எஃப்-35பி மற்றும் எஃப்-35சி என மூன்று வகைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான எஞ்சின் தன்மையை கொண்டிருந்தாலும், புறப்படும் மற்றும் தரையிறங்கும் முறையில் வேறுபடுகின்றன. திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய எஃப்-35பி ரக விமானம், குறுகிய தூரத்தில் புறப்படும் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டது. அதாவது, இது ஒரு கல்லை தூக்கி போட்டால் எப்படி செங்குத்தாக கீழே வருகிறதோ, அதே போல விமானம் தாங்கி கப்பலில் F-35 பி இறங்க முடியும். மற்ற இரண்டு ரக விமானங்களும் வழக்கமான முறையில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன்களைக் கொண்டவை.
என்னதான் பல சிறப்பம்சங்களை இந்த விமானம் கொண்டிருந்தாலும், இது நம்பகமான விமானம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதாவது, மூன்று விமானங்களுமே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பழுதடைந்திருக்கின்றன. இவை சாதாரண பழுதுகளாக இருக்காது. கை வைத்தால் செலவு அதிகம் இழுக்கும் பழுதுகளாக இருக்கும். இந்த பழுதுகள், விமானத்தை பறக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும். இதில் அடிக்கடி உதிரி பாகங்களை மாற்ற வேண்டி வரும்.
மட்டுமல்லாது உதிரி பாகங்கள் 'ஸ்பெலண்டர்' பைக்குகளுக்கு கிடைப்பதை போல எளிதாக கிடைத்துவிடாது. உதிரி கிடைக்க நாட்கணக்கில் ஆகலாம். சில நேரங்களில் வாரக்கணக்கில் கூட ஆகலாம். இவ்வளவு ஒட்டைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த விமானத்தை நமக்கு விற்க அமெரிக்காவுக்கு மனசு வந்ததோ! இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த விமானத்தை உற்பத்தி செய்த லாக்ஹீட் மார்ட்டினிடம் 'என்ன சிம்ரன் இதெல்லாம்?' என்று கேட்க தோன்றுவதாக பலரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications