டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்றுங்க.. சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்டால் சர்ச்சை!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நாட்டின் பழமைவாய்ந்த நகரங்களின் பெயர்களை புராணங்களின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர்கள் கருத்து. இதேபோல்தான் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தின் பெயரை பிரக்யாராஜ் என மாற்றியது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு.

ஹைதராபாத்- பாக்யாநகர்
மேலும் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்ற வேண்டும் எனவும் வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

டெல்லி பெயர் மாற்றம்
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், தலைநகர் டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும். இதற்கான போதுமான ஆதாரங்களை டெல்லி அறக்கட்டளை வைத்துள்ளது. டெல்லியில் பெயரை மாற்றாவிட்டால் நாடு மோசமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என தமிழகத்தின் முனிவர் ஒருவர் தம்மிடம் தெரிவித்தார் என பதிவிட்டிருந்தார்.

சு.சுவாமி கருத்துக்கு எதிர்ப்பு
சுப்பிரமணிய சுவாமியின் இந்த பதிவு கடும் சர்ச்சையாகி உள்ளது. நெட்டிசன்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை போட்டு வருகின்றன. @PehliFursat என்ற நெட்டிசன், பின்நவீனத்துவம் பேசுகின்ற இந்த காலத்தில் இன்னமும் புராணங்களை நம்பிக் கொண்டு ஆதாரங்களாக எப்படித்தான் பேசுகிறீர்களோ? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சு.சுவாமிக்கு ஆதரவு
@simon_robin என்ற நெட்டிசன் நகரங்களின் பெயர் மாற்றங்களால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவது இல்லை. அலகாபாத்தின் பெயரை பிரக்யாராஜ் என மாற்றினீர்கள்.. அங்கே இப்போது புனித நதிகளில் சடலங்கள்தான் மிதக்கின்றன. பெயர் மாற்றங்கள் எதற்கும் உதவப் போவது இல்லை என கூறியுள்ளார். @ProfSukh என்பவர், நீங்கள் எழுப்பியிருப்பது மிக முக்கியமான பிரச்சனை. இதற்கு உரிய நேரத்தில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications