ரொம்ப நடிக்காதீங்க.. மோடியின் குட்புக்கில் இடம்பெற நாடகமாடும் நிர்மலா சீதாராமன்.. சாடிய காங்கிரஸ்
டெல்லி: தெலுங்கானா மாநில ரேஷன் கடைகளில் பிரமதர் மோடியின் படம் வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் கூறியதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தெலுங்கான மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். சமீபகாலமாக சந்திர சேகரராவ், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் பாஜக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது.

நிர்மலா சீதாராமன் ஆய்வு
இந்நிலையில் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக நாடாளுமன்ற பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்துக்கு சென்றார். அப்போது அவர் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரேஷன் பொருட்களில் மத்திய அரசின் பங்கு என்பது பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறினார்.

மோடி படம் எங்கே?
அப்போது காமரெட்டி மாவட்டம் பான்ஸ்டா அருகே பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லை. இதனால் அவர் கோபமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை? என கேள்வி எழுப்பினார். மேலும் மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது. இதில் பெரும்பங்கை மத்திய அரசு வகிக்கிறது. இப்படி இருக்கும்போது பிரதமரின் படத்தை வைக்க உங்களுக்கு ஏன் ஆட்சேபனை?'' எனக்கேட்ட நிர்மலா சீதாராமன் காமரெட்டி மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் பாட்டீலை அழைத்து கேள்வி கேட்டார். ‛‛ரேஷன் அரசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் நிர்மலா சீதாராமன் கோபமடைந்ததோடு அரைமணி நேரத்தில் இதுதொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சியினர் கண்டனம்
நிர்மலா சீதாராமனின் இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரேஷன் பொருட்களின் மத்திய அரசின் பங்கு என்ன? என்பது பற்றி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்ததாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் தான் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கானாவை ஆட்சி செய்யும் தெலுங்கான ராஷ்ட்ரிய சமீதி மற்றும் எதிர்க்கட்சிகளாக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், ‛‛தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இதற்கு உரிமை கோரும் வகையில் அரசியல் தலைவர்களின் போட்டோவை வைக்கும் தேவை என்பது எழவில்லை. பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தியிருக்கும் இந்த நாடகம் மிகவும் மோசமாக உள்ளது'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications