திமுக அதிர்ச்சி-செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து?மீண்டும் சிறை? உச்சநீதிமன்றத்தில் 'அனல்' பறந்த விவாதம்!
டெல்லி: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையை சேர்ந்த வித்யா குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் ஓகா, ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரம்:
நீதிபதிகள்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி: இது தொடர்பாக ஜனவரி 16-ந் தேதி விரிவான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 222; பொது ஊழியர்கள் 212 பேர். இந்த 212 பேரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
நீதிபதிகள்: முக்கியமான குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராகி இருக்கும் போது 212 பொது ஊழியர்கள் எப்படி சாட்சியம் அளிக்க முன்வருவார்கள்? அமைச்சர் பதவியை ஏற்க செந்தில் பாலாஜி ஏன் அவசரம் காட்டினார்? செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதை கேட்டு தெரிவிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி: செந்தில் பாலாஜி விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார்.
நீதிபதிகள்: 212 பொது ஊழியர்கள் சாட்சியம் அளிக்கும் போது நெருக்கடி ஏற்படும் என்பதாலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என கேட்டு தெரிவிக்க சொல்கிறோம். இந்த கேள்விக்கு பதில் இல்லை எனில் நாங்களே முடிவு எடுப்போம். செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க வேண்டிய அவசரம் என்ன? அவர் அமைச்சராக இருக்கும் போது எப்படி சாட்சியம் அளிக்க முன்வருவார்கள்? அதனால்தான் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என கேட்கிறோம். செந்தில் பாலாஜி அமைச்சராகவே நீடிக்க விரும்புகிறார் எனில் நாங்கள் என்ன செய்வோம் என்பது தெரியாது.
அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தார்: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின்னரும் கூட தமிழக அமைச்சராகவே தொடர்ந்தார்.
செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி: இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க கூடாதா?
நீதிபதிகள்: மாநில அரசில் பணியாற்றும் 212 ஊழியர்கள்தான் சாட்சிகள்.. இதில் வாதாட எதுவுமே இல்லையே
செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி: சிறப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பாக யாருமே புகார் தெரிவிக்கவில்லையே... செந்தில் பாலாஜி அமைச்ராக இருந்த போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் வழக்கே பதிவு செய்திருக்க முடியாது.
நீதிபதிகள்: வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுவிட்டு அது பின்னர் திருப்பி கொடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி: செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது. விசாரணைக்கு செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வருகிறார். இதனால் அமைச்சர் பணிகளை கூட சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறார்.
மனுதாரர் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்: அமைச்சர ்பதவியை சரிவர செய்ய முடியவில்லை.. கவனிக்க முடியவில்லை எனில் ராஜினாமா செய்துவிடலாமே
அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தார்: செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்படும் முன்பு வரை மாநில தடயவியல் வல்லுநர் மணிவண்ணன் ஆஜரானார்; ஆனால் செந்தில் பாலாஜி விடுதலைக்குப் பின் அவர் ஆஜராகவில்லை
நீதிபதிகள்: செந்தில் பாலாஜி நீண்டகாலம் சிறையில் இருந்தார் என்பதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது; அவர் அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications