எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் சோசலிசம்.. சுப்பிரமணியன் சுவாமிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், நீதிமன்றம் கூறிய கருத்துக்கள், சுப்பிரமணியன் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு என்ன?: “இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில் சோசலிசம் மற்றும் மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இடையில் திருத்தம் செய்யப்பட்டு இரண்டு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதை நீக்க வேண்டும். இந்தியா தொடக்கத்திலிருந்தே மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்கிறது” என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

யாருடைய வழக்கு?: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பல்ராம் சிங், அஸ்வினி உபாத்யாயா ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் நகல் வழங்கப்பட்டிருந்தது. இதன் முகப்பில் 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' என இரண்டு வார்த்தைகள் விடுபட்டிருந்தன.
பாஜக இரண்டையும் நீக்க முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விமர்சனங்கள் இப்போது வரை தொடர்கின்றன. இந்த சூழலில்தான் தற்போது பாஜக மூத்த தலைவர் இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
விசாரணை: வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்தியா மதச்சார்பற்றதாக இருக்க விரும்பவில்லையா? என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர் பல்ராம் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “நாங்கள் அப்படி சொல்லவில்லை. ஆனால் அரசியலமைப்பு முகப்புரையில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்க்கிறோம்” என்று வாதாடினார்.
சோசலிசம், மதச்சார்பின்மை: மேலும், 'சோசலிசம்' என்ற வார்த்தையை சேர்ப்பது தனிப்பட்ட சுதந்திரத்தை தடுக்கும் என டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார் என்றும் தெரிவித்தார். மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாயா, “இந்தியா பழங்காலத்திலிருந்தே மதச்சார்பற்றதாகதான் இருக்கிறது. எனவேதான் சுதந்திரமடைந்த பின்னர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் இது சேர்க்கப்படவில்லை. ஆனால், இடையில் திருத்தம் செய்து இதை சொருகியிருக்கிறார்கள்” என்று வாதாடினார்.
நீதிபதிகள் என்ன சொன்னார்கள்?: வாதங்களை கேட்ட நீதிபதிகள், “அரசியலமைப்பு கட்டமைப்பின் அடிப்படை என்பது மதச்சார்பின்மைதான். இந்த நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மதச்சார்பின்மை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு மதச்சார்பின்மை மாதிரியைப் போலல்லாமல், மதச்சார்பின்மையின் புதிய மாதிரியை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்றும்,
தொடர்ந்து, “சோசியலிசம் என்றால் நாட்டின் அனைத்து வளங்களும் அனைத்து வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான்” எனவும் நீதிபதி கண்ணா கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட வார்த்தைகள் என்பதால், அவை அடைப்பு குறிக்குள் இடப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications