"தெருநாய்களுக்கு நன்றி.." சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன பாயிண்ட்! ஏன் இப்படி சொன்னார்? நோட் பண்ணுங்க
டெல்லி: தெருநாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றி, நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடங்களிலேயே விட உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே இந்தத் தீர்ப்பு தன்னை உலகளவில் பிரபலப்படுத்திவிட்டதாகவும் இதற்காக நாய்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார்.
தெருநாய் விவகாரத்தில் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து மீண்டும் அவற்றைப் பிடித்த இடங்களிலேயே விடுவிக்க வேண்டும் எனச் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி விக்ரம் நாத் இருந்த அமர்வு தான் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதற்கிடையே இந்தத் தீர்ப்பு குறித்து நீதிபதி விக்ரம் நாத் சில கலகல கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

தெருநாய் பிரச்சனை
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி விக்ரம் நாத், நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது கலகலப்பான பேச்சுக்குப் பெயர் பெற்றவர். "தெருநாய் வழக்கு" தன்னை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளதாக விக்ரம் நாத் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி விக்ரம் நாத், இந்த வழக்கைத் தனக்கு ஒதுக்கியதற்காகத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
தெருநாய்களுக்கு நன்றி
அவர் மேலும் பேசுகையில், "நீண்ட காலமாக, என்னுடைய பணிகளுக்காகச் சட்டத்துறையில் நான் அறியப்பட்டேன். ஆனால், இந்த நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைக்கத் தெரு நாய் வழக்கே காரணமாகும். இதனால் தெருநாய்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக எங்கள் தலைமை நீதிபதிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
சமீபத்தில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் உட்படப் பல வழக்கறிஞர்கள் தெருநாய் பிரச்சனை குறித்து கேள்விகள் கேட்டதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நாய் பிரியர்கள் மட்டுமின்றி.. நாய்களும் கூட எனக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் சொல்கிறது என்றே நினைக்கிறேன்" என்றார்.
சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன
முன்பு தெருநாய்கள் வழக்கில் அனைத்து நாய்களையும் பிடித்து அவற்றைக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உத்தரவிட்டது. அதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, நாய்களை கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கலாம் என்று கூறியது.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களை மட்டுமே காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்றும் மற்ற நாய்களைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்த சுப்ரீம் கோர்ட், அதற்காகப் பிரத்தியேக இடங்களை அமைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 11 உத்தரவை மிகவும் கடுமையானது என்று கூறிய விக்ரம் நாத் அமர்வு, அதை மாற்றியமைத்தது.
பின்னணி
டெல்லியில் தெருநாய் கடியால் குறிப்பாகக் குழந்தைகளிடையே ரேபிஸ் நோய் பரவுவது குறித்த வெளியான செய்திகளின் அடிப்படையில் ஜூலை 28ம் தேதி சுப்ரீம் கோர்ட் தெருநாய் விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications