சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கதுறையின் வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத் துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ 2000 நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய ரூ 2000 நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
சிறை வாசத்தில் இருந்த இறைவன்! சுதந்திர காற்றை வழங்கியது திமுக அரசு! அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்.!
சென்னை
இதைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
100 கோடி
அப்போது ரூ 100 கோடிக்கு ரொக்கம் மற்றும் ரூ 36 கோடி மதிப்பில் தங்கம், ரூ 2000 நோட்டுகள் ரூ 33.74 கோடி கண்டறியப்பட்டதாகவும் வருமான வரி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 வழக்குகள் பதிவு
இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் இரு வழக்குகளை முடித்துக் கொள்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத் துறையும் சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் தகுதியில்லை என கூறிக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சேகர் ரெட்டி
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது நியாயத்தை உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் அமலாக்கத் துறையின் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 28 இல் விசாரணை
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வினித் சரண், ஜே கே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வியாழக்கிழமை (ஏப் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சதுர்வேதி, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.
இன்று தீர்ப்பு
இந்த நிலையில் வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத் துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.