கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6ல் இறுதி விசாரணை! சுப்ரீம் கோர்ட் முடிவு
டெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை மே 6, 7 ஆம் தேதிகளில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பயங்கரமான மதக் கலவரம் ஏற்பட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் விசாரணை நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அவர்களில் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று 2023 பிப்ரவரியில் குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது. கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான வாதங்களையும் தொகுத்து மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிகளும், குஜராத் அரசும் தங்களின் வாதங்களைத் தொகுத்து தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படும். முதலில் மே 6 மற்றும் 7-ம் தேதிகளில் முழு நாளும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications