அரவிந்த் கெஜ்ரிவால் கேஸில் நாளை கிளைமாக்ஸ்! சிபிஐ கைது செய்தது செல்லுமா? ஜாமீனில் விடுதலையாவாரா?
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் சிறையிலேயே சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது.

பின்னர் கடந்த ஜூன் மாதம் தமக்கு ஜாமீன் கோரியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். விசாரணை நீதிமன்றமானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீனும் வழங்கியது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சிபிஐ அவரை கைது செய்தது. மேலும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிபிஐ- அமலாக்கத்துறை தரப்பு கடுமையான வாதங்களை முன்வைத்தன. இதனையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications