"எங்களால் தலையிட முடியாது, ஆனால்" பீகார் சாதி வாரியான கணக்கெடுப்பு! சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
டெல்லி: பீகாரில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தியாவில் பல்வேறு சாதிகள் இருக்கும் நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை இங்குள்ள பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பீகாரில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அங்குள்ள ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தியது. நாட்டிலேயே முதல்முறையாகச் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்திய மாநிலமாகப் பீகார் ஆனது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
சாதி வாரியான கணக்கெடுப்பு: அதன்படி பீகாரின் மக்கள் தொகை 13 கோடியாகும்.. அதில் 27.13% பேர் பிற்படுத்தப்பட்டோர்.. 36.01% மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகும். மொத்தமாக 63.14% பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர். அதேநேரம் 15.52% பொதுப் பிரிவில் இருக்கும் நிலையில், 19.65%. பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவும் 1.69% பழங்குடி இன மக்களாகவும் உள்ளதாக அந்த மக்கள் தொகை சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பை எதிர்த்து ஏக் சோச் ஏக் பிரயாஸ் மற்றும் யூத் ஃபார் ஈக்வாலிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு செல்லாது என்று கூறி அவர்கள் வழக்கைத் தொடர்ந்தனர்.
வழக்கு: முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாதி ரீதியான கணக்கெடுப்பைப் பீகார் மாநிலத்திற்கு உரிமை இல்லை என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய அரசின் அதிகாரத்தைப் பறித்ததாகவும் வாதிடப்பட்டது. இது அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தனது பதிலைத் தாக்கல் செய்தது. அதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் வேறு எந்த அமைப்புக்கும் உரிமை இல்லை என்று கூறியது. மேலும், தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
இன்று விசாரணை: அப்போதே சாதி ரீதியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தடை விதிக்கக் கோரி மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்தே பீகார் அரசு சாதி ரீதியிலான கணக்கெடுப்பை வெளியிட்டது.
நோட்டீஸ்: இந்தச் சூழலில் தான் பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்டபூர்வமானது தானா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த இந்த விவகாரத்தில் விள்ககமளிக்க பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக் இதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், மாநில அரசு உட்பட எந்தவொரு அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் தங்களால் தடுக்க முடியாது என்றும் அது தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதேநேரம் சாதி ரீதியாக கணக்கெடுப்பின் தரவுகளில் எதாவது சிக்கல் இருந்தால் அதை சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பீகார் அரசுக்கு நோட்டஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications