விஜய் ஆட்சிக்கு ஆபத்து? தவெக ரூ.1000 கோடி குதிரை பேர புகார்.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விசாரணை முடியும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைமைக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த மனு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டது. 108 இடங்களில் வென்று விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அவர்களுக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 என்ற நம்பர் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

சுமார் ஒரு வாரம் வரை குழப்பங்கள் இருந்த சூழலில், அதன் பிறகே தவெக ஆட்சியை அமைத்தது. அப்போதும் கூட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாலும் அதிமுகவில் ஒரு தரப்பு கொடுத்த ஆதரவாலும் தவெக பெரும்பான்மையை நிரூபித்தது.
இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மற்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தவெக தரப்பு விலைக்கு வாங்கியதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் பெரும்பான்மையைக் காட்டவும் சட்டவிரோதமான முறையில் எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்குக் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை முடியும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி.மோகனா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய தினம் வழக்கு விசாரணையில் முன்வைக்கப்படும் வாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிகிறது!












Click it and Unblock the Notifications