54 பேரை பலி கொண்ட மணிப்பூர் வன்முறை- 3 வழக்குகளை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
டெல்லி: 54 பேர பலி கொண்ட மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பான 3 பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இது மணிப்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அம்மாநிலத்தையே பற்றி எரிய வைத்துள்ளது.

எஸ்டி பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா, குக்கி இன மக்கள் மைத்தேயி மக்களுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மணிப்பூர் மாநில வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. தற்போது வரை இம்மோதல்களி 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.
மணிப்பூரில் சிக்கி உள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .மணிப்பூரில் மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களது வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மைத்தேயி இனக்குழுவினரும் சொந்த நிலத்து அகதிகளைப் போல வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வும் மணிப்பூர் சட்டசபையில் மலைபிரதேச கமிட்டி தலைவருமான டின்கங்லுங் கங்மேயி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இம்மனுவில், மைத்தேயி இனக்குழு பழங்குடிகளே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி பழங்குடிகளாக அங்கீகரிக்க முடியும்? மைத்தேயி இனத்தில் சில பிரிவினர் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர் -எஸ்சி பட்டியலில் வர முடியும் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியும். பழங்குடி இனத்தவராக எப்படி எதனடிப்படையில் அங்கீகாரம் தருவது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். ஆகையால் மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதேபோல உச்சநீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்த உள்ளது.
முன்னதாக மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications