இது இந்துஸ்தான் நாடு.. விஎச்பி மீட்டிங்கில் பேசிய ஹைகோர்ட் நீதிபதி.. உச்சநீதிமன்றம் போட்ட ஆர்டர்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று ‛இது இந்துஸ்தான் நாடு. இப்படி கூற எந்த தயக்கமும் இல்லை' என கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது இன்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு சென்ற நிலையில் நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது நடவடிக்கை பாய்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சேகர் குமார் யாதவ். இவர் கடந்த 8 ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவ அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அதாவது விஸ்வ இந்து பரிஷத்தின் சட்டப்பிரிவு அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் ஒரு பயிலரங்கம் நடத்தினர். அதில் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியிருப்பது தான் விவாதமாகி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் நீதிபதி சேகர் குமார் யாதவ், ‛‛நமது சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண்ணை நீங்கள் அவமதிக்க முடியாது. நான்கு மனைவிகளை வைத்திருக்கவோ, ஹலாலா செய்யவோ அல்லது முத்தலாக் நடைமுறைப்படுத்தவோ நீங்கள் உரிமை கோர முடியாது.
இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதை கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு மெஜாரிட்டியாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது" என்றார்.
நீதிபதி சேகர் குமார் யாதவின் இந்த பேச்சு தான் விவாதத்தை கிளப்பியது. அதோடு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி உள்பட பல இஸ்லாமிய பிரமுகர்கள் இந்த பேச்சை கண்டித்தனர். மேலும் இந்த பேச்சு இந்துக்களுக்கு ஆதரவாகவும், பிற மதத்தை சேர்ந்த மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்கு கடிதம் எழுதினார். அதில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது தொடர்பாக விபரங்களை அளிக்கும்படி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், ‛‛அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது செய்தித்தாள்களின் மூலமாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதிபதி சேகர் குமார் யாதவ் நிகழ்ச்சியில் பேசிய விபகரங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
தற்போது விவாதத்தை கிளப்பி உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் இதற்கு முன்பும் பேசும் பொருளாகி உள்ளார். அதாவது கடந்த 2021-ல் பசுவதை குற்றவாளியின் ஜாமீன் வழக்கில், நீதிபதி சேகர் யாதவ், "இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மற்றொரு உத்தரவில் நீதிபதி சேகர் குமார் யாதவ், ‛‛ராமர், கிருஷ்ணர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இந்திய பாரம்பரியத்தின் அங்கமாக அறிவிக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications