இந்திய கறுப்பு பண முதலைகளுக்கு செக்..! மிக விரைவில் கிடைக்கும் சுவிஸ் வங்கி கணக்கின் 3வது பட்டியல்
டெல்லி: சுவிஸ் வங்கிகள் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த 3ஆவது பட்டியலை இந்தியா இந்த மாதம் பெறவுள்ளது. இதில் முதல்முறையாக சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துகள் குறித்த தகவல்களும் இடம் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இந்த அழகிய சுவிஸ் நாட்டிலுள்ள வங்கிகளில் இந்தியாவில் இருந்து பலரும் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் முன்பு இருந்த வங்கி சட்டப்படி, வெளிநாட்டைச் சேர்ந்தவரும் கூட மிக எளிமையாக வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். அவர்கள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம்
இது கறுப்புப் பண முதலைகளுக்குச் சொர்க்க பூமியாக இருந்தது. இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாகப் பல ஆண்டுகளாகவே கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜக சார்பில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணம் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் குறித்த தகவல்கள் பெறப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தலைவர்கள் உறுதியளித்தனர்.

ரியஸ் எஸ்டேட்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் சுவிட்சர்லாந்து உடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை (automatic communication agreements) மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் அந்நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைப் பெற முடியும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் மூன்றாவது பட்டியலை இந்தியா விரைவில் பெறவுள்ளது. இதில் முதல் முறையாக சுவிஸ் நாட்டில் சொத்துக்கள் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வரிஏய்ப்பில் ஈடுபட்டவர்களை எளிதில் கண்டறிந்து அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்.

ஏன் முக்கியமானது
இது வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான குடியிருப்புகள், பிளாட்கள் மற்றும் காண்டோமினியங்கள் பற்றிய முழுமையான தகவல்களும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

எது இருக்காது
இந்த நடவடிக்கை சுவிட்சர்லாந்தின் அனைத்து முதலீடுகளும் கறுப்புப் பணம் என்ற தவறான பிம்பத்தைச் சரி செய்ய உதவும் என அந்நாட்டு நிதி துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற தகவல்களை மறைக்க எந்தவொரு காரணமும் இல்லை என்றும் இது நாட்டின் நிதி அமைப்பின் மீதான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டின் நிதித்துறை வல்லுநர்கள் குறிப்பிட்டனர். அதேநேரம் தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை, அங்கு டிஜிட்டல் கரண்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் குறித்த விவரங்கள் இந்தப் பட்டியலில் இருக்காது. ஏனென்றால் இவை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

மூன்றாவது பட்டியல்
சுவிஸ் வங்கிகள் கறுப்புப் பணத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக நீண்டகாலமாக நிலவி வரும் கருத்துக்களை முறியடிக்க சுவிட்சர்லாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியா பெறும் மூன்றாவது பட்டியல் இதுவாகும். முன்னதாக கடந்த 2019 மற்றும் 2020 செப்ம்டப்ர மாதங்களிலும் இந்தியா பட்டியலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications