டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு ஏன்? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட தகவல்!
டெல்லி: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் உள்ளிட்டோர் கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்தனர். டெல்லியில் நேற்று மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்றார். 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி, ராஜ்பவன் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் ஆளுநர் ரவி சந்தித்தார். "தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறுபான்மையினர் மீது அமைச்சர் கிரண் ரிஜிஜுகாட்டும் அக்கறை பாராட்டுக்குரியது மற்றும் ஊக்கமளிக்கிறது என இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications