வாழ்நாளில் மிகவும் அரிது.. இந்தியாவில் பசுமையாக மாறிய காற்றின் தர குறியீடுகள்.. வெதர்மேன் மகிழ்ச்சி
டெல்லி: வாழ்நாளில் மிகவும் அரிதாக ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் காற்றின் தர குறியீடுகள் பசுமையாக மாறியதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவிற்கிணங்க காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள கடைகள் மூடப்பட்டன.
சாலைகளும் மக்கள், வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ரயில்நிலையங்களில் ஈ, காக்கா இல்லாமல் இருந்தது.

காற்று மாசு
நாடு முழுவதும் வாகன இயக்கம் இல்லாததால் பெரும்பாலான நகரங்களில் வாகன இயக்க சப்தமும் தூசும் இல்லாமல் இருந்தது. நகரங்கள் முழுவதும் கிராமிய மணம் கமழ்ந்தது. முக்கியமாக இந்த ஊரடங்கால் காற்று மாசு ஏற்படவில்லை. டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் பொதுவாக வாகன இயக்கங்களால் காற்று மாசு அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

வாழ்நாள்
இதை சமீபத்தில் டெல்லியில் உணர்ந்தோம். அங்கு காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதால் அங்கு சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பலர் ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்கி சுவாசித்த அவலங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் வாழ்நாளில் மிகவும் அரிதான விஷயம் இது.

போக்குவரத்து
இந்தியா முழுவதும் போக்குவரத்து இல்லாத நகரங்களை பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் காற்றின் தர குறியீடுகளை பார்ப்போம். அதில் டெல்லியை தவிர்த்து ஏனைய நகரங்களின் காற்று மாசு மிகவும் பசுமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். டெல்லியை தவிர்த்து ஏனைய நகரங்களில் காற்றின் தரம் இரு இலக்கத்தில் உள்ளது.

மஞ்சள் நிறம்
டெல்லியில் மட்டும்தான் 3 இலக்கமாக உள்ளது. குறைந்தபட்சமாக டெல்லி துவாரகாவில் 209-ம், அதிகபட்சமாக பவானாவில் 263ம் காற்றின் தரம் உள்ளது. இது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. 0- 50 வரை காற்றின் தரம் இருந்தால் மிகவும் நல்லது. இது பச்சை நிறத்தில் குறியிடப்பட்டிருக்கும். 51-100 வரை இருந்தால் பரவாயில்லை. இது மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

200 புள்ளிகள்
அது போல் 101-150 வரை இருந்தால் அது உடலுக்கு ஏற்றதல்ல. 151- 200 வரை இருந்தால் அது மிகவும் மோசமானது. அது போல் 201-500 வரை இருந்தால் மிகவும் ஆபத்தானது என காற்று மாசு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் 200 புள்ளிகளுக்கு மேல் காற்றின் தரம் இருந்தது அந்த மக்களை கவலையடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications