ஆமாம்..விமானத்தின் அவசரகால கதவை தற்செயலாக திறந்தார் பாஜக எம்பி தேஜஸ்வி.. ஒப்புக் கொண்ட மத்திய அரசு!
இண்டிகோ விமானத்தின் அவசகார கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
டெல்லி: இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை எதிர்பாராதவிதமாகத்தான் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்துவிட்டார் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மாநில பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா. இவரது பல கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி தேஜஸ்வி சூர்யாவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தனர். இந்த பயணத்தின் போது எமர்ஜென்சி கால- அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்ததால் பயணிகள் பெரும் பதற்றமடைந்தனர். இதனால் 2 மணிநேரம் விமானம் தாமதமாக புறப்பட்டது. மேலும் தங்களது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டார் என தகவல்கள் வெளியாகின.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த தகவலை முதலில் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விதமான கருத்துகளை கூற அதுவும் சர்ச்சையானது. சுமார் 1 மாத காலத்துக்கும் மேலாக இந்த விமான பயண சர்ச்சை நீடித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தன.
இதன் பின்னர் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் கதவை தவறுதலாகவே திறந்துவிட்டார் என ஒரு விளக்கம் தந்தார். அத்துடன் தமது செயலுக்காக தேஜஸ்வி சூர்யா மன்னிப்பும் கேட்டார் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. இதனால் ஒருவழியாக இந்த விமான பஞ்சாயத்து முடிந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விமானத்தின் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்தது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி லாலாராய் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணை அமைச்சர் விகே சிங் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், விமானத்தின் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா தற்செயலாகவே திறந்தார். அவர் வேண்டும் என்றே அவசரகால கதவை திறக்கவில்லை. தாம் அப்படி திறகக் நேரிட்டதற்காக தேஜஸ்வி சூர்யா அப்போதே பைல்ட் உள்ளிட்டோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். உரிய விதிகளின் படி இத்தகைய சம்பவம் பதிவும் செய்யப்பட்டது எனவும் மத்திய இணை அமைச்சர் விகே சிங் விளக்கம் தந்தார்.












Click it and Unblock the Notifications