பிராந்திய மொழிகளை மதியுங்கள்! தெலங்கானா அமைச்சர் நறுக்! இந்தி திணிப்பில் ஒரே அணியில் தென் மாநிலங்கள்
டெல்லி: இந்தி மொழி திணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கேடி ராம ராவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்,
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல பிராந்திய மொழிகள் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எனத் தனியாகத் தேசிய மொழி இல்லை.
அலுவல் மொழியாக மட்டும் இந்தியும் ஆங்கிலமும் உள்ளது. இருப்பினும், இந்தி தொடர்ந்து மற்ற மாநிலங்களில் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தி
இந்தி திணிப்பு புகார் எதோ இப்போது மட்டும் கிளம்பியது இல்லை. சுந்தரம் அடைந்த காலத்தில் இருந்தே டெல்லி இந்தியைத் திணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்தே வருகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இந்தி திணிப்பில் தமிழகம் மிகவும் தீவிரமாகவே உள்ளது. தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

நிறுவனங்கள்
அரசு முறையில் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியைத் தவிர இதர மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற புகாரும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்கிலம், இந்திய தெரியாத நபர்கள் சொந்த மாநிலத்திலேயே சில சேவைகளைப் பெற முடியாத நிலையும் ஏற்படுவதாகவும் புகார் முன்வைக்கப்படுகிறது.

விமானம்
தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் இந்த புகார் இப்போது கிளம்பி உள்ளது. தெலங்கானாவில் அப்படித்தான் விமானத்தில் பயணித்த ஒரு பெண், பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறார். இன்டிகோ நிறுனவத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில் பயணித்த தெலுங்குப் பெண் ஒருவர், ஆங்கிலம் இந்தி தெரியாததால், இருக்கையை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது
அதாவது இரு நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் வந்துள்ளது. இரண்டுமே தெலுங்கு பேசும் மாநிலத்தில் உள்ள நகரங்கள் தான். இருந்த போதிலும், அதில் பயணித்த ஒரு பெண்ணுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியவில்லை என்பதால் அவர் தனது இருக்கையில் இருந்து கட்டாயப்படுத்தி மாறி அமர வைக்கப்பட்டு உள்ளார்.

பாதுகாப்பு
இந்தச் சம்பவத்தை ட்வீட்டரில் பகிர்ந்த பயணி ஒருவர் இதுவும் ஒரு வகையிலான பாகுபாடு தான் என்று ட்வீட் செய்து இருந்தார். இது தொடர்பாக பணிப்பெண்களிடம் கேட்ட போது பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இதற்கு ஆதரவாக தெலங்கானா அமைச்சர் கேடிஆரும் கருத்து தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் கேடிஆர்
அவர் தனது ட்விட்டரில், "இண்டிகோ நிர்வாகமே, உள்ளூர் மொழிகளை மதிக்கத் தொடங்குங்கள். ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத பயணிகளையும் மதிக்கத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராந்திய வழித்தடங்களில், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற உள்ளூர் மொழி பேசக்கூடிய பணியாளர்களை அதிகம் நியமிக்கவும். இது தான் ஒரே தீர்வாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் மனநிலை
இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மக்கள் மனநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தி மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகத் தென் மாநில மக்கள் புகார் கூறி வருகின்றனர். சமீபத்தில் தான் கர்நாடகாவில் இந்தி திவாஸ் கொண்டாட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. தென் மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிரான மனநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications