'மதவெறி’: பகுஜன் சமாஜ் எம்பி தீவிரவாதி- லோக்சபாவில் விமர்சித்த பாஜக எம்பிக்கு ஜேபி நட்டா நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் மதவெறியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை 'தீவிரவாதி' என விமர்சித்த பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார். மேலும் ரமேஷ் பிதாரி விளக்கம் தர பாஜக தலைவர் ஜேபி நட்டா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
லோக்சபாவில் நேற்று சந்திரயான் -3 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதூரி தீவிரவாதி என விமர்சித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. லோக்சபாவில் இருந்து ரமேஷ் பிதூரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த தகாத வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பிரச்சனை ஓயவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவும் ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டின் சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் தமது சமூக வலைதளப் பக்கங்களில், நேற்று சந்திராயன்:3 வெற்றியைப் பாராட்டும் விதமாக மக்களவையில் நடந்த விவாதத்தில் BJP எம் பிக்கள் பேசிய காணொலிகளை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை. இதன் உச்சமாக எதிர் கட்சி MP களை தீவிரவாதிகள் என்றும் மாமாக்காரர்கள் என்றும் இன்னும் மோசமான பல வார்த்தைகளைக் கொண்டும் தாக்கினார்கள். அறிவியல் பார்வை, சந்திராயன் வெற்றி, இந்தியா கூட்டணி, அவையின் மாண்பு அனைத்தும் ஒரு சேர ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பாஜக எம்பி ரமேஷ் பிதூரி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, ரமேஷ் பிதூரி 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் தர வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications