ஆஹா.. முழு வேகத்துடன் மீண்டும் களமிறங்குகிறது பேட்டில் கிரவுன்ட் இந்தியா.. ஆனாலும் சில கண்டிஷன்கள்?
டெல்லி: இந்தியாவில் விரைவில் 'பேட்டில் கிரவுண்ட் இந்தியா' (Battlegrounds Mobile India -BGMI) கேமிங் ஆப் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான தடையை மத்திய அரசு இன்று விலக்கியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை பிரச்னை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது. அதாவது சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை இந்திய வீரர்கள் தடுக்க முயன்றபோது மோதல் வெடித்திருக்கிறது. இதன் மோதல் காரணமாக ஒருவரையொருவர் கற்கள், கம்பு ஆகியவற்றை கொண்டு தாக்கிக்கொண்டனர்.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை 40ஐ தாண்டியிருக்கும் என பல்வேறு புலனாய்வு பத்திரிகைகள் கூறியிருந்தன. நல்வாய்ப்பாக இந்த பகுதியில் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் உயிரிழப்பு குறைந்த பட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு இதற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதேபோல இந்தியாவும் உள்நாட்டில் சீனாவின் வர்த்தக செயல்பாடுகளை முடக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக டிக்டாக், பப்ஜி போன் 118 சீன ஆப்கள் இந்தியாவில் பயன்படுத்த கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டன. இது சீனாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் முக்கமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 2021ம் ஆண்டு ஜூலை மாதம் பப்ஜி தனது பெயரை 'பேட்டில் கிரவுண்ட் இந்தியா' (Battlegrounds Mobile India -BGMI) மாற்றிக்கொண்டு களமிறங்கியது.
பப்ஜியில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் இந்த 'பேட்டில் கிரவுண்ட் இந்தியா' கேமில் தனது அக்கவுன்ட்டை இணைத்துக்கொள்ள முடியும். இந்த கேம் வெளிவந்த சில நாட்களிலேயே சுமார் 10 கோடி பேர் இந்த கேமை டவுன்லோட் செய்து விளையாட தொடங்கிவிட்டனர். ஆனால் இதற்கு அப்புறம்தான் ரியல் பஞ்சாயத்தே வெடித்தது. அதாவது, டேட்டா பிரைவசி மற்றும் சர்வர் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைக்கவில்லை.
எனவே சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் இந்த கேமை மத்திய அரசு மீண்டும் தடை செய்தது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை பேட்டில் கிரவுண்ட் கேமிங் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனையடுத்து இதற்கான தடையை தற்காலிகமாக மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்படி மூன்று மாதங்கள் இந்தியாவில் இந்த செயலிக்கு முதற்கட்டமாக அனுமதி வழக்கப்படும். இந்த 90 நாட்கள் கேம் முழுமையாக பகுப்பாய்வு கண்காணிப்பில் இருக்கும்.
இப்படி இருக்கையில் விதிமுறைகளை மீறுவதாக தெரிய வந்தால் உடனடியாக ஆப் முழுவதுமாக தடை செய்யப்படும். அதேபோல இந்த கேமை விளையாடுவதற்கு நேர வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்த கேமில் விளையாடும் கேரக்டர்களின் ரத்தத்தின் நிறத்தை பச்சையாகவோ சிவப்பாகவோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த முறை ரத்தம் பச்சை நிறத்தில் மட்டும்தான் இருக்கும். இதனை மாற்ற இயலாது. இவ்வளவு மாற்றங்கள் செய்து, தடை நீக்கிய நிலையிலும் இன்னும் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
தேதி அறிவித்த பின்னர்தான் இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய முடியும். அதேபோல இது தென்கொரியவை சேர்ந்த கிராஃப்டன் இன்க் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும், சீனாவின் டென்சென்ட் ஆதரவுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications