பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் எவ்வளவு? டேட்டா இல்லை.. நாடாளுமன்றத்தில் கைவிரித்த மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் பராமரிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டின் நான்கு தூண்களில் பத்திரிகை துறையும் ஒன்று. இப்படி இருக்கையில் ஒரு செய்தியை சேகரித்து அதன் உண்மை தன்மையோடு மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிகையாளர் சந்திக்கும் சிக்கல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. 2022ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 142ல் இருந்து 150ஆக அதிகரித்திருக்கிறது. இதன் அர்த்தம், பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா எந்த அளவு பலவீனமாக இருக்கிறது என்பதே.

கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட மத மோதலில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து செய்தி வெளியிட்டதற்காக நான்கு பத்திரிகையாளர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இது வெறும் சாதாரண சம்பவம்தான். அடையாளம் தெரியாத நபர் ஒருபுறம் எனில் காவல்துறை மறுபுறம் பத்திரிகையாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 67 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானோர் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது போன்ற அடக்குமுறையில் மற்றொரு முக்கியமான தாக்குதல் கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் சிறையில் அடைக்கப்பட்டதுதான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற அவர், அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோல பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா கொடுத்த புகாரின் பெயரில் தி வயர் நிறுவன ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறை ரெய்டு நடத்தியது.
இது தவிர முகமது சுபைர், சன்னா இர்ஷாத் மட்டூ ஆகியோருக்கு நேர்ந்த துயரம் பத்திரிகை துறையில் அழிக்க முடியாத கறையாக படிந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கௌரி லங்கேஷ் கொலை எக்காரணத்தைக்கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை சர்வதேச நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இப்படி இருக்கையில்தான் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான தரவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இது தொடர்பான தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் பராமரிக்கவில்லை என்று கூறி தரவுகளை கொடுக்க மறுத்துள்ளது.
மத்திய அரசு தரவுகளை மறுப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தரவுகள் தங்களிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தரவுகள் இல்லாத அரசு ( No data available government) என்று விமர்சித்திருந்தன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் எவ்வித தரவுகளும் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications