போதை பொருள் கடத்தல்..திமுக ‘மாஜி’ ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன்! டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
டெல்லி: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்ட வழக்கில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல சினிமா தயாரிப்பாளரும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதி கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதி கைது செய்யப்பட்டதோடு, அவரது கூட்டாளியான சதானந்தமும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தியதை ஜாஃபர் சாதிக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அவரது குரல் மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போதை பொருள் கடத்தல் மூலமாக வரும் பணத்தை ஜாபர் சாதிக் சினிமா உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பிரபல இயக்குனரான அமீரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் தான் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கடத்தல் வழக்கில் மட்டும் தான் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல் படி ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி விசாரணை முடிவடையும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாஃபர் சாதிக் கையெழுத்திட வேண்டும், அவரது செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி அது எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், முகவரி மாறினால் அது குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் ஜாமீன் தொகையாக ஒரு லட்சத்தை ஜாஃபர் சாதிக்கும், மேலும் இருவர் தலா ஒரு லட்சத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் திகார் சிறையில் இருந்து ஜாபர் சாதிக் வெளியே வர முடியாது. காரணம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அந்த வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டால் தான் ஜாபர் சாதிக் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications