எல்ஜிபிடி+ திருமணம் அங்கீகாரம்! வழக்கை கையில் எடுத்த உச்சநீதிமன்றம்! மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவு
டெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் உறவில் இருப்பது சரி என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தாலும், இவர்கள் திருமணத்தை தற்போது வரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுள்ளது.
உலகம் முழுவதும் 25க்கும் அதிகமான நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரித்துள்ளன. ஆனால் சில நாடுகள் இதனை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவை பொறுத்த அளவில் இவர்கள் உறவில் இருப்பது தவறில்லை என்ற உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் தற்போது வரை ஓரினச் சேர்க்கையாளர்களை இரண்டாம் தர மூன்றாம் தர குடிமக்களாகவே இந்திய சமூகம் பாவித்து வருகிறது.
இதற்கு எதிராக முற்போக்கு கட்சிகள், அமைப்புகள் தொடர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டப் போராட்டத்தின் அங்கமாக இவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தனர். பல்வேறு மாநிலங்களில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றிருக்கிறது.

பாஜக
ஆனால் பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள் இவர்களின் திருமணங்களை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. மாறாக வெளிப்படையாக எதிர்த்திருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய பாஜக எம்பி சுஷில் மோடி,"ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து இருப்பது, உறவு வைத்துக்கொள்வது அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதைத்தாண்டி திருமணம் செய்துகொள்வது போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்வது என்பது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல். இது போன்ற விவகாரங்களை இரண்டு நீதிபதிகள் முடிவு செய்துவிட முடியாது. இது நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட வேண்டும்.

எதிர்ப்பு
இவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஒருவேளை இந்த திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டால் திருமணச் சட்டம், விவாகரத்து சட்டம் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு சட்டம் ஆகியவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். இதனை ஏற்க இந்திய சமூக தயாராக இல்லை. இது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பொருத்தமற்றது. ஆனால் சில இடதுசாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடி இவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றனர்" என தொடர் விமர்சனங்களை வைத்திருந்தார்.

விளக்கம்
ஏறத்தாழ இதேபோன்ற கருத்துக்களை பல பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம் பாலின சிறுபான்மையினராக உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் சம அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இவையனைத்துமே இவர்களை சட்டப் போராட்டம் நோக்கி நகர்த்தி இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக முக்கியமான வரி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதாவது, "பதின் பருவத்தில் அவர்கள் தங்களிடம் இந்த மாற்றங்களை உணர தொடங்குகின்றனர். குணப்படுத்துவதற்கு இது நோய் அல்ல. இது மரபு ரீதியிலான மாற்றம்.

அரசியலமைப்பு
தனக்கான துணையை தேர்வு செய்துகொள்வது என்பது இந்நாட்டில் வாழும் மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம். இதனை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது. இப்படி இருக்கையில் அவர்கள் எந்த பாலினத்தை சார்ந்தவர்களை வேண்டுமானாலும் தன்னுடைய இணையாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று கூறியிருந்தது. ஆனால் சிலர் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதனை புறக்கணித்த நீதிமன்றம், இது பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு அல்ல. அரசியலமைப்பு சார்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
இந்நிலையில் இவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர் விசாரிக்கும். மனுதார்கள் ஒருவேளை டெல்லிக்கு வர முடியவில்லை, அல்லது வழக்கறிஞரை வைக்க முடியவில்லை எனில் வீடீயோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம். இந்த மனு வரும் மார்ச் 13ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications