காங்கிரஸின் வெற்றியே பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம்.. ப.சிதம்பரம்
சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் பயம் காரணமாகவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியது. அதை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை பாஜக அரசு வழங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 ஐ கடந்தது. சில மாநிலங்களில் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. சரக்கு போக்குவரத்துக்கு முக்கியமானதாக விளங்கும் டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. வியாபாரிகள், கனரக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சரக்கு கட்டண உயர்வால் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தன.
இந்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வந்தது. அதை மத்திய அரசு ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழித்து வருகிறது. கடுமையான எதிர்ப்பு காரணமாக, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வியை தழுவியது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம் என்கிற விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியே பெட்ரோல், டீசல் வரியை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் " சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதி, 3 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலின் விளைவுதான் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரிக் குறைப்பு.
மத்திய அரசு விதிக்கும் கடுமையான வரி உயர்வால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது என்று தொடர்ந்து கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரிப்பேராசையால்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டதாக நாங்கள் குற்றம்சாட்டினோம்" என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து 16 இடங்களில் வென்றுள்ளன. இந்த தேர்தல் வெற்றி குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் பதிவிட்ட கருத்தில், " இடைத் தேர்தல் குறித்த சில சுவாரஸ்யமான ஆய்வுகளை இங்கு வழங்கியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் வாக்குகள் கடந்த தேர்தலைவிட கணிசமாக கூடியுள்ளது, வாக்கு சதவீதம்அதிகரி்த்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் 28 சதவீதமாக இருந்த வாக்குசதவீதம 48.9% அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 35 சதவீதத்திலிருந்து 57ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் 18 சதவீதமாக இருந்த வாக்குசதவீதம் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. பாஜகவிடம் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த இடங்களில் இரு கட்சிகளும் சமமாக வாக்குகளைப் பெற்றுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 45.45 %, பாஜக வாக்கு சதவீதம் 47.58%, கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வென்றன. காங்கிரஸ் வாக்கு வாக்கு சதவீதம் 44.76%, பாஜக 51.86% வாக்குகள் பெற்றுள்ளன.
காங்கிரஸின் வெற்றிக்குப் பின்னால் புதிய காற்று வீசுகிறது. வலிமையும் வேகமும் கூடுமா?", என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications