16 முக்கிய மசோதா.. ஒத்துழைப்பு கோரி இன்று அனைத்து கட்சி கூட்டம்..நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் இன்று மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற அலுவல் ஆய்வு கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் துவங்கி நடைபெறும். இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களால் இந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற கூட்டம் நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2 மாநிலங்களிலும் தேர்தல் முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.7ஆம் தேதி தொடக்கம்.. முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு
நாளை துவங்கும் நாடாளுமன்ற கூட்டம்
இந்நிலையில் தான் நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. இந்தியாவில் நிலவும், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனை முக்கியமானதாக எழுந்துள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
இந்த பரபரப்புக்கு மத்தியில் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பிரச்சனை உள்பட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க முற்படலாம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் 16 மசோதாக்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மசோதாக்கள் என்னென்ன?
இந்த 16 மசோதாக்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சிலவற்றறை கூறலாம். அதன்படி பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் வலுப்படுத்துதல் தேர்தல் செயல் முறை சீர்த்திருத்தம், கடலோர மீன் வளர்ப்பு ஆணைய மசோதா, வனப்பாதுகாப்பு மசோதாவை கூறலாம். மேலும் 1948ல் கொண்டு வரப்பட்ட பல் மருத்துவர் சட்டத்தை நீக்கி தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா, 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இன்று அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமாகும். இதனால் தான் டெல்லியில் இன்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதில் மக்களவை, மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி எம்பிக்களின் குழு தலைவர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்பு
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் மசோதா தொடர்பாக விவாதம் செய்யப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் எதிர்க்கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
அலுவல் ஆய்வு கூட்டம்
இதுதவிர நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் இன்று மாலையில் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.