தண்டனையை எதிர்த்து அப்பீல்..சில நிமிடங்களில் ராகுல் பதிவிட்ட ட்விட்..என்ன சொல்லிருக்கார் பாருங்க
டெல்லி: நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பிறகு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் இது. இந்த போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம். உண்மையே எனக்கு ஆதரவு" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அப்போது, நிதி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாகப் பேசினார்.

குற்றவாளி என தீர்ப்பு
ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக கூறி குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ்மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். தீர்ப்பை வாசித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

எம்பி பதவி பறிப்பு
மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். எனினும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கியதோடு தண்டனையை ஒரு மாதகாலத்திற்கு நிறுத்தி வைத்தார். ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே அவரது எம்.பி பதவியை லோக்சபா செயலகம் பறித்தது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றால் அவரது மக்கள் பிரதிநிதி பொறுப்பு பறிக்கப்படும். இந்த விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லோக்சபா செயலகம் அறிவித்தது.

தேர்தலில் போட்டியிட முடியாத நிலை
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் எம்.பி பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில் டெல்லியில் ராகுல்காந்தி வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், தண்டனை காலம் 2 ஆண்டுகள் மற்றும் அதன்பிறகு 6 ஆண்டுகள் என 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேல்முறையீடு செய்தார் ராகுல் காந்தி
ராகுல் காந்திக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியால் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சூரத் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். பிரதான மனுவுடன் மேலும் 2 கூடுதல் மனுக்களை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். அதில், ஜாமீன் கேட்டு ஒரு மனுவும், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 2-வது மனுவும் தாக்கல் ராகுல் காந்தி செய்யப்பட்டது.

உண்மையே எனது ஆயுதம்
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் வரை ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவுக்கு மனுதாரர் (புர்னேஷ்மோடி) பதிலளிக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பிறகு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் இது. இந்தபோராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம். உண்மையே எனக்கு ஆதரவு" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications