தாவூத் இப்ராஹிமுக்கு என்ன ஆச்சு? யார் இவர்? எதற்காக இவரை இன்டர்போல் தேடுகிறது? வெளியான ஷாக் தகவல்கள்
டெல்லி: சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும், தாவூத் இப்ராஹிம் பற்றிய சலசலப்புகள் தற்போது மீண்டும் அதிகரித்திருக்கின்றன. யார் இந்த தாவூத்? ஏன் அவர் தேடப்படுகிறார்? தற்போது அவர் குறித்த சலசலப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் தாவூத். பின் நாட்களில் ஒட்டு மொத்த மும்பையையே தனது கட்டுப்பாட்டில் தாவூத் கொண்டுவருவார் என அன்று யாரும் கணித்திருக்கவில்லை. பதின் பருவத்திலேயே சிலசில திருட்டுகளிலும், ரவுடிசத்திலும் தாவூத் அதிகமாக ஈடுபட்டிருந்தார். இளம் பருவத்தில் மாஃபியா கும்பலின் தொடர்பு இவரை மேலும் அதிக குற்ற செயல்களில் ஈடுபடுத்தியது.

கொள்ளை, கொலை, போதை பொருட்கள் கடத்தல், ஆள்கடத்தல் என கோதாவில் இறங்கினார். இவருக்கு பக்க பலமாக இருந்தது இவரது அண்ணன்தான். எல்லாம் சரியாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இவருடைய அண்ணன் ஒரு எண்கவுண்டரில் கொல்லப்பட்டார். மட்டுமல்லாது மும்பை போலீசின் கழுகு பார்வை தாவூத்தை துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் அண்ணன் போன சோகம், இன்னொரு பக்கம் போலீசின் குடைச்சல். இதையெல்லாம் பார்த்து டென்ஷனான தாவூத், ஒரு முக்கியமான மூவை முன்னெடுத்தார். அதுதான் 'டி' கம்பெனி!
அதுவரை கமிஷனுக்கு வேலை பார்த்த ரவுடிகளை எல்லாம், பெரிய பெரிய நோக்கத்திற்காக இந்த கம்பெனி ஒன்று திரட்டியது. சூதாட்டம், ஆள் கடத்தல், கொலை, போலி ரூபாய் நோட்டுகள், குண்டு வெடிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற வேலைகளை இந்த 'டி' கம்பெனி சர்வதேச அளவில் செய்ய தொடங்கியது. இந்த குற்றச் செயல்கள் பெரும் பணத்தை 'டி' கம்பெனியிடம் புழங்க செய்தது. பணம் சேரசேர டி கம்பெனியின் பலம் அசாத்தியமாக வளர்ந்தது. கூடவே கூடுதல் பயங்கரவாத தாக்குதல்களும் அதிகரித்தன.
1993ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோல அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் தொடர்பில் இருந்ததால் அமெரிக்காவும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
அதன் பின்னர் 170 உயிர்களை பலி வாங்கிய 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் இன்டர்போல், தாவூத்தை தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என இந்தியா பலமுறை குற்றம்சாட்டியது. இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடமும், சர்வதேச நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தது. ஆனால் தாவூத் இங்கு இல்லை எனவும், அவரை நாங்கள் பாதுகாக்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஒரே போடாக மறுத்துவிட்டது.
இப்படி இருக்கையில்தான் தாவூத் இப்ராஹிமுக்கு யாரோ விஷம் கொடுத்துவிட்டார்கள் என தகவல்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இறந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அதேபோல பாகிஸ்தானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் இந்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் தாவூத் குறித்த பேச்சு மீண்டும் அடிப்பட தொடங்கியிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தாவூத்தை பிடிக்க இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் ரேடார் பார்வையிலிருந்து தப்பிக்க இது போன்ற நாடகங்களை தாவூத் அரங்கேற்றுகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications