பாஜகவின் முடிவு தொடங்கிவிட்டு! எந்த ஆதாரமும் இல்லாமல் நடவடிக்கை..பிரஸ்மீட்டில் மஹூவா மொய்த்ரா ஆவேசம்
டெல்லி: என்னை எம்.பி பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நெறிமுறைகள் குழுவுக்கு இல்லை என்றும் அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியிருப்பதாக மஹூவா மொய்த்ரா ஆவேசமாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசினார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் பிரபல தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுச்ந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அறிக்கையை நெறிமுறைகள் குழு வெளியிட்டிருந்தது.

மஹூவா மொய்த்ரா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. இந்த நிலையில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை இன்று கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார்.
பதவி பறிப்பு: அப்போது இப்பரிந்துரை அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதேபோல லோக்சபாவில் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பலரும் மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால், மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடியது. அப்போது மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை மீது விவாதம் நடந்தது.
விதிகளை மீறியுள்ளது: இந்த விவாதத்தில் முடிவில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கொண்டு வந்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்கும் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-
எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை. நெறிமுறைகள் குழு ஆதாரம் இன்றி செயல்பட்டுள்ளது. என்னை பேசவிடாமல் செய்வதன் மூலம் அதானி விவகாரத்தை திசை திருப்பிவிடலாம் என மோடி அரசு நினைக்கலாம். எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான ஆயுதமாக இந்தக் குழு மாறியுள்ளது. ரூல் புக்கில் உள்ள அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியுள்ளது" என்றார்.
அதானி ஒருவருக்காக மட்டுமே: மேலும் அவர் கூறுகையில், "நெறிமுறைகள் குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேர்மாறாக செயல்பட்டுள்ளது. நெறிமுறைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே இது இல்லை. நாளையே எனது வீட்டிற்கு சிபிஐ அனுப்புவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியை பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி தவறாக விமர்சித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெண்கள், சிறுபான்மையினர்களுக்கு எதிராக இந்த மோடி அரசு செயல்படுகிறது. அதானி ஒருவருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எனக்கு தற்போது 49 வயது ஆகிறது. நான் இன்னும் 30 வருடத்திற்கு பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications