ரீல்ஸ் போடுவோர் கவனத்துக்கு.. இந்தியாவில் டிக்டாக் தடை நீக்கமா? மத்திய அரசு தந்த முக்கிய விளக்கம்
டெல்லி: நம் நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்த செல்போன் செயலியான டிக்டாக் கடந்த 2020ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த எல்லை மோதல் காரணமாக டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே உறவு வலுப்பெற்று நிலையில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுவது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் நம் நாட்டு படை வீரர்களும், சீன படை வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த மோதலில் நம் நாட்டின் ராணுவ வீரர்கள் பலியாகினர். அதேபோல் சீனாவின் ராணுவ வீரர்களும் இறந்தனர்.

இந்த மோதலை தொடர்ந்து நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு மோசமானது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 2020 ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் டிக்டாக் செயலி.
ஓபனான இணையதளம்
இந்த டிக்டாக் செயலி என்பது சீனாவின் ByteDance என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இதையடுத்து டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அந்த நிறுவனம் கடுமையக முயன்றது. ஆனால் நடக்கவில்லை.
இந்நிலையில் தான் தற்போது திடீரென்று டிக்டாக் செயலியின் இணையதளம் நம் நாட்டில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் ஓபன் ஆகிறது. இதனால் விரைவில் டிக்டாக் செயலியும் நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் நேற்று முதல் பரவின.
மத்திய அரசு தந்த விளக்கம்
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு சார்பில், ‛‛டிக்டாக்கை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பாக வெளியாகும் செய்தி தவறானது'' என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டிக்டாக் மீண்டும் வரும் என்று காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வரும் என நம்ப என்ன காரணம்?
ஏனென்றால் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல செயலிகள் மீண்டும் நடைமுறைக்கு வந்ததன. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்தியா - சீனா உறவு மேம்பட்டு வரும் நிலையில் சீன செயலிகளான Xender, TanTan உள்பட பல செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
இதனால் விரைவில் டிக்டாக் வரும் என்று நேற்று முதல் எதிர்பார்த்தவர்களுக்கு மத்திய அரசு ஷாக் கொடுத்துள்ளது. முன்னதாக நம் நாட்டின் பாதுகாப்பு, டேட்டா திருட்டு உள்ளிட்டவற்றை தடுப்பதன் ஒரு பகுதியாக இந்த செயலி தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் பலகோடி பயனாளிகளை டிக்டாக் இழந்தது.
இனி வாய்ப்பு இருக்கா?
இருப்பினும் அமெரிக்கா நமக்கும், சீனாவுக்கும் வரிகளை விதித்துள்ளது. இதனால் பகையை மறந்து அமெரிக்காவை சமாளிக்க இருநாடுகளும் கைகோர்த்துள்ளன. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் நரேந்திர மோடியை ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதேபோல் 2020ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடியும் இந்த மாத இறுதியில் சீனாவுக்கு செல்கிறார். இப்படி இருநாடுகள் உறவு தொடர்ந்து வலுவாகும் பட்சத்தில் சீன செயலிகள் மீண்டும் நம் நாட்டுக்குள் என்ட்ரி கொடுக்கலாம் என் சர்வதேச நிபுணர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications