திருப்பதி லட்டு: சந்திரபாபு நாயுடுவுக்கு குட்டு-மத்திய அரசிடம் பதில் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திரா அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக்குழு போதுமானதா வேறு விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்யக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கடுமையான அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி, திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் பிஆர் கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

இன்றைய விசாரணையின் போது, திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பொதுவெளியில் பகிரங்கமாக கூறியிருப்பது தவறானது; இது மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு ஆந்திரா மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுப்பிரமணியன் சுவாமி எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும்? யார் எனுமதி தந்தது? என ஆந்திரா அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போதுதான், லட்டுகள் விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விட்டது. பின்னர் ஏன் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச வேண்டும். கடவுளை அரசியல் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கலப்பட நெய்யில்தான் லட்டுகள் தயாரிக்கப்பட்டன என்பதற்கான உறுதியான ஆதாரங்களும் இல்லை. இது பல கோடி பக்தர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாது எனவும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குட்டு வைத்தனர். ஆந்திரா முதல்வரின் செயல் தேவையில்லாதது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் ஆந்திர மாநில இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழுவே போதுமானதா? வேறு ஒரு விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications