இன்றைய ஓமிக்ரான் அப்டேட்ஸ்: கோவா, மணிப்பூரில் முதலாவது ஓமிக்ரான் பாதிப்புகள் உறுதி
டெல்லி: கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதலாவாது ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநில அரசு இப்போதைக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவின் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில்தான் அதிகபட்சமாக 142 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலங்களில் ஓமிக்ரான்
மகாராஷ்டிராவில் 141; கேரளாவில் 57; குஜராத்தில் 49; ராஜஸ்தானில் 43; தெலுங்கானாவில் 41 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கும் கர்நாடகாவில் 31 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருந்தது.

மத்திய அரசு அட்வைஸ்
ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்று சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. அதில், கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது; ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்களே ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறது. பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகள் போடுவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மாநிலங்களில் ஊரடங்கு அமல்
டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. டெல்லியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் தற்போதைய நிலையில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

கோவா, மணிப்பூரில் முதல் ஓமிக்ரான்
இதனிடையே கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து மணிப்பூர் திரும்பிய நபருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. அந்த நபருக்கு இம்பாலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இருந்து கோவா வந்த 8 வயது சிறுவனுக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தின் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது.












Click it and Unblock the Notifications