"பேடிஎம் வேண்டாமே.." தொழில் செய்வோர் ஜாக்கிரதையா இருங்க! வர்த்தகர்கள் கூட்டமைப்பு பரபர அறிவிப்பு
டெல்லி: பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், நாடு முழுக்க இருக்கும் வர்த்தகர்களுக்கு அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடி முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ரிசர்வ் வங்கி, அந்நிறுவனம் வரும் பிப்ரவரி 29 முதல் அதன் சேவைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடி வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டில் இருக்கும் அனைத்து வர்த்தகர்களும் பேடிஎம் செயலியில் இருந்து மற்ற செயலிகளுக்கு மாறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பேடிஎம்: இது தொடர்பாக சிஏஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வர்த்தகர்கள் ரிஸ்க்கை தவிர்க்க.. வேறு பேமெண்ட் ஆப்ஷன்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சிஏஐடியின் தேசியத் தலைவர் பிசி பார்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், "பேடிஎம் மீது சமீபத்தில் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள், அந்த நிறுவனம் வழங்கும் நிதிச் சேவைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
மேலும், நிறுவனம் தொடர்ந்து இயங்குமா என்பதிலும் கேள்வி எழுகிறது. எனவே, தடையற்ற செயல்பாட்டை உறுதிப்படுத்தவும், நிதி பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கவும், மக்கள் பயனர்களை மாற்றுச் செயலிகளைப் பயன்பாடுகளுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது நேரடி UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளே கூட நேரடியாகப் பணம் செலுத்தும் செயலிகளை வைத்துள்ளது.
பிரச்சினை: முறையான சரிபார்ப்பு கூட இல்லாமல் பேடிஎம் பேமெண்ட் வங்கியில் பல நூறு கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி பயனாளர்கள் தகவல்களை முறையாகப் பராமரிக்காமல் இருந்ததே இந்த நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக சுமார் 1,000 பயனர்களின் கணக்கு ஒரே பான் நம்பருடன் இணைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
ரிசர்வ் வங்கி மற்றும் தணிக்கையாளர்களும் நடத்திய ஆய்வில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் தவறானது என கண்டறியப்பட்டது. இது தவிர சட்டவிரோத பண மோசடிக்கும் கூட சில கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி சந்தேகம் கொண்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்க துறைக்கு தகவல் தெரிவித்த பிறகு, ரிசர்வ் வங்கி இது தொடர்பான ஆவணங்களை உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
அமலாக்க துறை: நிதி முறைகேடுகளுக்கான ஆதாரம் கிடைத்தால் அமலாக்கத் துறை இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும். இது மட்டுமின்றி பல முக்கிய பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்கவில்லை என்பதும் முக்கிய புகாராக இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பரிவர்த்தனைகளை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வந்துவிட்டதால் இனி சேமிப்புக் கணக்குகள், பாஸ்டேக்குகள் உள்ளிட்ட சேவைகளை பேடிஎம் நிறுவனத்தால் நேரடியாக வழங்க முடியாது. இனிமேல் இந்த சேவைகளை வழங்க அவர்கள் மூன்றாம் தரப்பு வங்கிகளை நம்பியிருக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாலேயே வேறு செயலிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அடி விழுந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 36% வரை அவர்கள் பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications