பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கர் நீக்கப்படுவாரா? மத்திய அரசு வட்டாரங்கள் சொல்வது என்ன?
டெல்லி: புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியான பூஜா கேத்கர் , ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால் பூஜா கேத்கர் ஐஏஏஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற பூஜா கேத்கர் மகாராஷ்டிரா கேடர் ஐஏஏஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா புனே மாவட்ட உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. பூஜா தனது தனிப்பட்ட ஆடி காரில மகாராஷ்டிர அரசு என்ற பெயர் பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். இது சர்ச்கையானது.

இதேபோல் புனே மாவட்ட கூடுதல் கலெக்டர் அஜய் மோரே இல்லாதபோது அவரது முன் அறையை பூஜா ஆக்கிரமித்ததுடன் அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களை அகற்றியதாக புகார் எழுந்தது. மேலும் வருவாய் உதவியாளரிடம் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர்ப் பலகை மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டிருக்கிறார். அத்துடன் அதிகாரிகளையும் வசைபாடியதாகவும் புகார் எழுந்தது.
இந்த சூழலில் பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற ஐஏஏஸ் அதிகாரி என்பதால் தனது மகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்தாராம். இப்படி அடுத்தடுத்து புகார் எழுந்ததால், மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளருக்கு புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவேசா கடிதம் எழுதினார். இதையடுத்து பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கர் புனேயிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது எல்லாவற்றையும் விட ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தனது யுபிஎஸ்சி வேட்புமனுவில் நான் கிரிமிலேயேர் என்று கூறிய நிலையில், அவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. என்டிடிவி பூஜா கேத்கருக்கு மகாராஷ்டிரா முழுவதும் ஐந்து நிலங்கள் மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பபதாகவும். இந்த சொத்துக்களின் மதிப்பு 22 கோடி ரூபாய் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
புனே மாவட்டத்தின் மஹாலுங்கேயில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்கள், புனே மாவட்டத்தின் தாதாவாலியில் ரூ. 4 கோடி மதிப்பில் நிலம், அகமத்நகரின் பச்சுண்டே மற்றும் நந்தூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நிலங்கள் ஆகியவை பூஜா பெயரில் உள்ளதாம்.இது தவிர பூஜா கேத்கருக்கு அகமதுநகர் மற்றும் புனே ஆகிய இடங்களில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாம்.
பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆண்டு வருமானம் 42 லட்சம் ரூபாய் என்றும் பூஜா கேத்கரின் தந்தைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பூஜா கேத்கர் தனது யுபிஎஸ்சி தேர்வுக்கான மனுவில் ஓபிசி அல்லாத நான் கிரீமி லேயர் என்று கூறி கலந்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில், ஓபிசி அல்லாத கிரீமிலேயர் பிரிவுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் 40 லட்சம் வருமானம் உள்ள பூஜா கேத்கர் நான் கிரிமிலேயராக காட்டி ஐஏஎஸ் பொறுப்பிற்கு வந்திருந்தார். இதன் மூலம் இந்திய அளவில் 841 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

பூஜா கேத்கர் யுபிஎஸ்சி தேர்வின்போது கற்றல் குறைபாடு உள்ளிட்டபல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சிறப்புச் சலுகைகளை பெற்றுள்ளார். எனினும் இதுகுறித்த மருத்துவ சரிபார்ப்புக்கும் அவர் செல்லவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது
அதுபற்றி விசாரிக்க ஒருநபர் குழுவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பூஜா கேத்கர் அளித்த ஆவணங்களையும், தேர்வு பெற்ற பிறகு அளித்த ஆவணங்களையும் அக்குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. பூஜா கேத்கர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications