திரிபுரா வன்முறைகள்- அமித்ஷாவிடம் முறையிட்ட திரிணாமுல் எம்.பி.க்கள்! சாயோனி கோஷ்க்கு ஜாமீன்!
டெல்லி: திரிபுரா வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று புகார் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து திரிபுரா அரசிடம் அறிக்கை கேட்க இருப்பதாக அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
திரிபுராவில் நவம்பர் 25-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு ஆளும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

சாயோனி கோஷ்
முதல்வர் பிப்லாப் தேவ் பிரசாரம் செய்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தனர். இதனை நேரில் பார்த்து தமது சமூக வலைதளங்களில் கிண்டலாக பதிவிட்டிருந்தார் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் நடிகை சாயோனி கோஷ். இதனால் அவரது காரை பாஜக தொண்டர்கள் தாக்கினர்.

சாயோனி கோஷ் திடீர் கைது
இந்நிலையில், பாஜக தொண்டர்களை கார் ஏற்றி கொல்ல முயற்சித்ததாக சாயோனி கோஷ் மீது திரிபுரா போலீஸ் வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். மேலும் சாயோனி கோஷ் கைது செய்யப்பட்ட அகர்தலா கிழக்கு காவல்நிலையத்தில் போலீசார் முன்னிலையில் ஹெல்மெட் அணிந்த பாஜக நிர்வாகிகள், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை லத்திகளால் அடித்து விரட்டினர். இதில் சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த நிலையில் இன்று சாயோனி கோஷுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அமித்ஷாவிட்ம முறையீடு
இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அகர்தலா செல்ல முயன்றார். ஆனால் அவருக்கு திரிபுரா போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் மனு அளிப்பதற்காக நேரம் கேட்டிருந்தனர். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை சந்திக்க அமித்ஷா காலையில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அமித்ஷா மாலையில் சந்திப்பு
இதனால் டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பாஜகவினருக்கு எதிராக முழக்கங்களையும் பாடல்களையும் பாடி எதிர்ப்பு தெரிவித்தனர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள். பின்னர் மாலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை அமித்ஷா சந்தித்தார். அப்போது திரிபுரா வன்முறைகள் தொடர்பாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திரிபுரா அரசிடம் விளக்கம் கேட்பதாக அமித்ஷா உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications