தேர்தல் முறையில் சீர்திருத்தமா? டெல்லியில் 2 நாட்கள் தேர்தல் ஆணையர்கள் கூட்டம்! இன்று தொடங்குகிறது
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தலைநகர் டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரி மட்டுமின்றி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் செயல்முறைகள் தொடர்பாக எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக வாக்காளர்கள் எளிமையாக வாக்களிக்கும் வகையில் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டத்தின் முதல் நாளில், நவீன தேர்தல் மேலாண்மை, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகரிகள் பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவற்றிற்கும் உதவும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications