பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு.. 2 நீதிபதிகள் அமர்வாக குறைத்து நாளை விசாரணை
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு வழங்கும் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பதிலாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜன.6) விசாரிக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீத இடங்களை வழங்கும்படி தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ஆம் தேதி பிறப்பித்தது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பு (ரூ.8 லட்சம்) எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்பது பற்றிய விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா, சூர்ய காந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சந்திரசூட் "ரூ 8 லட்சம் வருமான உச்சவரம்பு எந்த அளவுகோல் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை அமல்படுத்தும் முன்பாக எடுக்கப்பட்ட நடைமுறைகள் என்ன, அதற்கான புள்ளி விவரங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
ஓபிசிபிரிவிலும் ரூ 8 லட்சத்திற்கும் குறைவான வருமானத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவார்கள். இந்த இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. எதன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கை ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மேற்கண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வால் இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 3 பேர் கொண்ட அமர்வை இரண்டாக குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா இன்றைய தினம் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட இரு அமர்வு நாளை விசாரணை நடத்துகிறது. அது போல் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்த மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications