பறிபோன சிவசேனா கட்சி பெயர், சின்னம்..உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய உத்தவ் தாக்கரே!
சிவசேனா பெயர், சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது உத்தவ் தாக்கரே தரப்பு.
டெல்லி: சிவசேனாவின் பெயர், சின்னம் ஆகியவற்றை மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் தீவிர இந்துத்துவா கோட்பாடு, மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கோட்பாட்டை வைத்து சிவசேனா கட்சியை 1960களில் உருவாக்கியவர் பால் தாக்கரே. பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவராக இருந்து வந்தார்.

மற்றொரு இந்துத்துவா கட்சியான பாஜகவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் நீடித்து வந்தது சிவசேனா. 2019 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக- சிவசேனா உறவு முறிந்தது. சிவசேனா தமது எதிரி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தது. மகாராஷ்டிரா முதல்வரானார் உத்தவ் தாக்கரே. அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராக்கப்பட்டார்.
இதன்பின்னர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியில் மோதல் வெடித்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் அணி திரண்டனர். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவை ஆதரித்தது. இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. மகாராஷ்டிரா முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.

இதனையடுத்து சிவசேனா கட்சி பெயர், சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்த்அல் ஆணையம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் பின்னர் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். ரூ2,000 கோடி செலவு செய்து தங்களது கட்சி பெயர், சின்னத்தை திருடிவிட்டனர் என உத்தவ் தாக்கரே தரப்பு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இம்முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார் உத்தவ் தாக்கரே. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு வலியுறுத்தியது. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்தது. உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மீது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications