"நரகம் மாதிரி இருக்கு".. 1000 கிமீ நடந்து போன மாணவர்கள்! மூடப்பட்ட இந்திய தூதரகம்! உக்ரைனில் கொடூரம்
டெல்லி: உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு இருக்கும் இந்திய தூதரகம் மூடப்பட்டு உள்ளது. அதோடு கீவ் பகுதியில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக மேற்கு எல்லை பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
கீவ் பகுதியில் இருந்து இந்தியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தூதரகம் மொத்தமாக மூடப்பட்டு இருக்கிறது. கீவில் இருந்து மொத்தமாக இந்தியர்கள் வெளியேறிவிட்டதாகவும், அங்கு இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் அடிப்படையில் கீவ் பகுதிக்கு வெளியே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய படைகள் அணி வகுத்து நிற்கின்றன.

உக்ரைன் படைகள்
தற்போது உக்ரைன் மேற்கு பக்கத்தில் உள்ள லிவிவ் என்று நகரத்தில் இந்திய தூதரகம் தற்காலிகமாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் சாலை மார்க்கமாக தற்போது மேற்கு நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். ஆனால் இன்னும் கர்கிவ் பகுதியில் இந்தியர்கள் இருக்கிறார்கள். அங்கு தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் அங்கு மீட்பு பணிகளை செய்வது கடினம் ஆகி உள்ளது.

மூடப்பட்டது
பெரும்பாலான மாணவர்கள் 1000-1500 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயங்குகிறது. ஆனாலும் அங்கு மக்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பேருந்தும் இல்லை. இதனால் மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் இந்தியர் நபவீன் சேகரப்பா பலியானார். கர்நாடகாவை சேர்ந்த 21 வயதான மாணவரான இவர் கர்கிவ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானார்.

பரிதாபம்
இதையடுத்து அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அனைவரையும் உக்ரைனில் இருந்து வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமானம், இந்திய விமானப்படை விமானங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ரோமானியா, போலந்து, ஸ்லோவாக் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் தோராயமாக 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்ளனர்.

உணவு இல்லை
இதில் 60 சதவிகிதம் அதாவது 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் இந்திய மாணவரின் மரணம் மற்ற மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பங்கர்களில் பதுங்கி இருக்கும் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர். பலர் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, கழிப்பறை செல்ல வசதி இன்றி பங்கர்களில் முடங்கி உள்ளனர். வெளியே சென்றால் எங்கே ஏவுகணை தாக்கி விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

நரகம்
பல இந்திய மாணவர்கள் ஏற்கனவே காணாமல் போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உக்ரைனில் இருந்து மீண்டு வந்த மாணவர்கள், உக்ரைன் நரகம் போல இருக்கிறது. அங்கிருந்து தப்பித்து வந்ததே பெரிய சாதனை. எப்போது ஏவுகனைகள் தாக்கும். எப்போது குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாத பதற்றம் அங்கு நிலவியது. எங்களை மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்று டெல்லி திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications