இது இருண்ட காலம்.. இந்தியாவில் 45 வருடத்தில் இல்லாத வேலைவாய்ப்பு தட்டுப்பாடு.. காரணம் இதுதான்!
இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு மோசமான வேலைவாய்ப்பு தட்டுப்பாடு நிகழவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் இரண்டு முக்கியமான விஷயங்கள் மிக முக்கியமான பங்காற்றும் என்று கூறுகிறார்கள். ஒன்று விவசாயிகளின் கடன் பிரச்சனை. இன்னொன்று வேலை வாய்ப்பு பிரச்சனை.
இதில் விவசாயிகளின் கடன் பிரச்னையை கடன் தள்ளுபடியின் மூலம் எளிதாக சரி செய்துவிட மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வேலை வாய்ப்பு பிரச்னையை என்ன செய்தும் உடனடியாக சரி செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
என்ன சர்வே
தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office's Periodic Labour Force Survey) அமைப்பு வெளியிட்ட வேலைவாய்ப்பு சர்வேயின்படி கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழந்து வருகிறது. இந்தியாவின் மிக மோசமான வறுமையான காலத்தில் கூட இவ்வளவு வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்தது கிடையாது.
எவ்வளவு இருக்கிறது
கடந்த 2017-2018 அறிக்கையின்படி மொத்தம் 6.1 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிகழ்கிறது. வேலைவாய்ப்பு பிரச்சனை எப்போதும் இந்த அளவிற்கு சரிந்தது கிடையாது. உதாரணமாக 2011-2012ல் வேலைவாய்ப்பு பிரச்சனை வெறும் 2.2% ஆக மட்டுமே இருந்தது. இதற்கு முன் 1972ல் மட்டுமே இதேபோல் 5%க்கும் அதிகமாக வேலைவாய்ப்பின்மை இருந்தது.
என்ன விவரம்
முக்கியமாக 15-29 வயதிற்கு இடைப்பட்டவர்களில் வேலைவாய்ப்பின்மை 17.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல் பெண்களில் வேலைவாய்ப்பின்மை 13.6 சதவிகிதமாக உள்ளது. 2004-2005 விட 2014க்குபின்தான் வேலைவாய்ப்பின்மை அதிகம் ஆகி உள்ளது. அதேபோல் புதிய வேலைகளும் இந்த வருடங்களில் சுத்தமாக உருவாக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
காரணம் என்ன
இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த பிறகுதான் வேலைவாய்ப்பு அடியோடு குறைந்து உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் வேலைவாய்ப்பு அடியோடு படுத்தது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.