மத்திய பட்ஜெட் 2021: தொழில்துறையினருக்கு 'சர்பிரைஸ்' கிடைக்குமா?
டெல்லி: நாளை (பிப்.1) 2021ம் ஆண்டு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
Recommended Video

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினரும் பேராவலுடன் இதனை எதிர்நோக்கியுள்ளனர். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஐந்து முக்கிய அம்சங்கள்
குறிப்பாக செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, சுகாதாரம், ஜிடிபி ஆகிய ஐந்து முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் தொழில் துறையும் மக்களுக்கான உள்கட்டுமானத் திட்டங்களும் முற்றிலும் முடங்கிய நிலையில், அதனை மேம்படுத்தும் வகையில் பொது உள்கட்டுமானத் திட்டங்களில் அதிகம் செலவிடப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை
அதேநேரம், அரசின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. பங்கு விற்பனை, மூலதனச் சந்தைகளில் கடன், வரி வருவாய் போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்தும்.
செலவுகள் அதிகரித்து ஒருவேளை வருவாய் குறைந்துவிட்டால் நிதிப் பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே இந்த மாதிரியான நெருக்கடியான சமயத்தில் நிதிப் பற்றாக்குறை விஷயத்தில் அதிக கண்டிப்புடன் இருக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சிறப்புக் கடன்
மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு வட்டி மானியத்துடன் சிறப்புக் கடன் உதவி, தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி, மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவி, ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி
குறிப்பாக, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவி, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், அந்தத் துறையினர் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை எதிர்பார்க்கின்றனர். அதேபோல், கடுமையாக விலையேறியுள்ள மூலப்பொருள் உயர்வை கட்டுப்படுத்த குழு அமைப்பது குறித்த அறிவிப்பும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் பற்றிய அறிவிப்பு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் அறிவிப்புகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications