மக்களுக்கு ‘குட்’ நியூஸ்.. கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி : கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதை அடுத்த ஓராண்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆண்டிற்கு 12 சிலிண்டர் பெறுவோருக்கு ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 200 மானியம் வழங்குவதை அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 200 மானியம் வழங்குவதைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ரூ. 200 மானியம்
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.59 கோடி பேர் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம், தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு 2022-23 நிதியாண்டில் ரூ.6,100 கோடியாகவும், 2023-24ல் ரூ.7,680 கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டும் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விலை உயர்வு
எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டது.

சிலிண்டர் 950
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது வெளிச்சந்தையில் ரூ.1149.50க்கு விற்கப்படுகிறது. இதில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.200 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பட்டத்தில் அவர்களுக்கு 950 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும். இந்த மானியத்துக்காக மத்திய அரசுக்கு 2023-24ஆம் ஆண்டில் ரூ.7,680 கோடி செலவாகும்.












Click it and Unblock the Notifications